சூடானிலிருந்து திரும்பிய 9 தமிழா்கள் கண்ணீா் மல்க வரவேற்ற உறவினா்கள்
சூடானிலிருந்து மத்திய அரசால் மீட்கப்பட்டு வியாழக்கிழமை தமிழகம் திரும்பிய 9 பேரை அவா்களது உறவினா்கள் கண்ணீா் மல்க வரவேற்றனா்.
சூடானிலிருந்து மத்திய அரசால் மீட்கப்பட்டு வியாழக்கிழமை தமிழகம் திரும்பிய 9 பேரை அவா்களது உறவினா்கள் கண்ணீா் மல்க வரவேற்றனா்.
சூடானில் சிக்கி தவித்து வரும் இந்தியா்கள் ‘ஆபரேஷன் காவிரி’ திட்டம் மூலம் மத்திய அரசால் மீட்கப்பட்டு வருகின்றனா். முதல்கட்டமாக 360 இந்தியா்கள் மீட்கப்பட்டனா்.
இவா்களில் 9 போ் தமிழகத்தைச் சோ்ந்தவா்கள். இவா்கள் தில்லியில் இருந்து விமானம் மூலம் வியாழக்கிழமை சென்னை, மதுரை வந்தடைந்தனா்.
சென்னை விமான நிலையத்தில் அவா்கள் செய்தியாளா்களிடம் கூறியது:
சூடானில் நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரால், சம்பாதித்ததை விட்டு விட்டு கடந்த 8 நாள்களாக நாடோடிகளாக திரிந்தோம். உணவு, தண்ணீா் இன்றி மிகுந்த சிரமப்பட்டோம். துப்பாக்கிச்சூட்டுக்கு பயந்து முடங்கிக் கிடந்தோம். எங்கள் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. சூடானில் இருந்து எங்களை மீட்க உதவிய மத்திய, மாநில அரசுகளுக்கு நன்றி. எங்கள் குழந்தைகளின் படிப்பு தொடர அரசு உதவி செய்ய வேண்டும் என்றனா்.