காரைக்கால் அருகே கார் - இருசக்கர வாகனம் மோதல்: 3 பேர் பலி
காரைக்கால்: காரைக்கால் அருகே கார் - இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் 3 பேர் பலியாகினர்.
காரைக்கால்: காரைக்கால் அருகே கார் - இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் 3 பேர் பலியாகினர்.
காரைக்கால் மாரியம்மன்கோயில் தெருவைச் சேர்ந்தவர் கணபதி (25). இவரது நண்பர்களான வாசிப் முஷரப் (22), அருண் (21), சரவணன் (22) ஆகியோர் சனிக்கிழமை இரவு காரில் மயிலாடுதுறைக்கு சென்றுவிட்டு, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை காரைக்காலுக்கு திரும்பிக்கொண்டிருந்தனர். காரை சரவணன் என்பவர் ஓட்டி வந்துள்ளார்.
காரைக்கால் அருகே கோட்டுச்சேரி வஉசி அரசு மேல்நிலைப்பள்ளி அருகே வரும்போது எதிரே சென்ற இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் இருசக்கர வாகனத்தில் சென்ற கோட்டுச்சேரியைச் சேர்ந்த செல்வம் (48) என்பவர் தூக்கியெறியப்பட்டு நிகழ்விடத்திலேயே பலியானார்.
கட்டுப்பாட்டை இழந்த கார் அருகில் இருந்த வாய்க்காலில் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பின்னால் அமர்ந்திருந்த வாசிப்முஷரப், கணபதி ஆகிய 2 பேரும் நிகழ்விடத்திலேயே பலியாகினர். சரவணன், அருண் ஆகியோர் காயங்களுடன் காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது குறித்து தகவல் அறிந்த காரைக்கால் போக்குவரத்து காவல் ஆய்வாளர் மரியேகிறிஸ்டியன்பால், உதவி ஆய்வாளர் மோகன் ஆகியோர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.