நெய்வேலி: கடலூர் மாவட்டம், நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனத்தின் இரண்டாவது சுரங்கத்தில் தொழிலாளர்களை ஏற்றுச் சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளாளதில் 33 பேர் காயமடைந்தனர்.
என்எல்சி இரண்டாவது சுரங்கத்தில் புதன்கிழமை முதல் காலப் பணிக்குச் செல்ல தொழிலாளர்கள் வந்திருந்தனர். அவர்களில் 37 தொழிலாளர்கள் பேருந்து மூலம் சுரங்கத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
பேருந்து சுரங்கத்திற்குள் சென்று கொண்டிருந்த போது திடீரென பேருந்தில் முன் பக்க அச்சு முறிந்தது. இதனால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து அங்கிருந்த பெட்ரோல் பங்க் அருகே கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. பேருந்தில் இருந்து தொழிலாளர்கள் அலறல் சத்தம் கேட்டதால், அருகில் வேலை செய்து கொண்டிருந்த சகத் தொழிலாளிகள் ஓடி வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இதில் காயமடைந்த 33 தொழிலாளர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் என்எல்சி பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு என்எல்சி மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இதில் சற்று பலத்த காயம் அடைந்த 2 தொழிலாளர்கள் சென்னையில் உள்ள மருத்துவமனைக்கும், 5 தொழிலாளர்களை புதுச்சேரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தகவல் அறிந்த நெய்வேலி சட்டப்பேரவை உறுப்பினர் சபா.ராஜேந்திரன், என்எல்சி இயக்குநர்கள் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வரும் தொழிலாளர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.