சேலம்: தலைவாசல் அருகே முன்விரோதம் காரணமாக மூன்று பேரை அரிவாளால் வெட்டிய வழக்கில் பாஜக பிரமுகர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே வீரகனூர் அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் கலியன் மகன் ரவிக்குமாரும், அதே பகுதியைச் சேர்ந்த சதீஷ் என்பவரும் கட்டிட பெயிண்டிங் தொழில் கூட்டாக செய்து வந்துள்ளனர்.
இதில், இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் ரவிக்குமார் கடந்த சில மாதங்களாக தனியாக பெயிண்டிங் காண்ட்ராக்ட் எடுத்து வேலை செய்து வந்தார்.
இதனால் கோபமடைந்த சதீஷ், அவரது உறவினரான பாஜக மாவட்ட தொழில்நுட்ப அணி செயலாளர் சாமுவேலிடம் தெரிவித்துள்ளார்.
இதைனையடுத்து கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு ரவிக்குமாரை சாமுவேல் பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளார்.
இதில், வாய்த்தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியதையடுத்து ரவிக்குமார், அவரது அண்ணன் புகழேந்தி மற்றும் மூத்த அண்ணன் மகன் யுவண் ஆகிய மூன்று பேரையும் அரிவாளால் வெட்டியுள்ளனர்.
இந்த வழக்கில் பாஜக பிரமுகர் சாமுவேலை கைது செய்த வீரகனூர் போலீசார், ஆத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மாவட்ட கிளை சிறையில் அடைத்தனர்.