திமுக சார்பில் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.
வேட்பு மனு தாக்கல் செய்த பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் கை சின்னத்தில் போட்டியிடுவதற்காக இன்று கூட்டணி கட்சித் தலைவர்களுடன் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளேன்.
என்னைப் பொறுத்தவரை திமுக கூட்டணியில் போட்டியிட்டு வெற்றி பெறுவதை விட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் போட்டியிட்டு வெற்றி பெறுவதை அதிகமாக விரும்புகிறேன். எனது மகன் பணியை நான் தொடர்ந்து செய்ய எனக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
நமது முதலமைச்சர் ஈரோடுக்கு ஏராளமான திட்டங்களை அறிவித்துள்ளார். ஈரோடு மாவட்ட வளர்ச்சி திட்டத்திற்காக நான் பாடுபடுவேன். இதற்காக அமைச்சர் முத்துசாமி, முதலமைச்சர் மு. க. ஸ்டாலினுடன் இணைந்து செயல்படுவேன்.
இந்த தேர்தலில் நிச்சயமாக நாங்கள் மிகப் பெரும் வெற்றியை பெறுவோம். ஈரோடு மாநகர் பகுதியில் ஏற்பட்டிருக்கும் போக்குவரத்து நெரிசலை குறைக்க பாடுபடுவேன். இதைப்போல் சாயக்கழிவு நீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண பாடுபடுவேன். திமுகவினர் தேர்தல் பணிகளை சிறப்பான முறையில் பணியாற்றி வருகின்றனர்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் வேட்பாளர் அறிவிப்புக்கு முன்பே அமைச்சர்கள் முத்துசாமி, நேரு கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர். நிச்சயமாக ஈரோடு கிழக்கு தொகுதியில் நாங்கள் மிகப் பெரிய வெற்றியை பெறுவோம் என்று இளங்கோவன் கூறினார்.