மாணவர்கள் சுய ஒழுக்கத்துடன் திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் என இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், தில்லியில் 26.01.2023 அன்று நடைபெற்ற குடியரசுத் தின அணிவகுப்பில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 14 நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் பங்கேற்று சிறப்பித்தனர். இவர்களுக்கான குடியரசுத் தின அணிவகுப்பு பயிற்சி முகாம் தில்லியில் 17.01.2023 முதல் 25.01.2023 வரை நடைபெற்றது.
தில்லியில் நடைபெற்ற குடியரசுத் தின அணிவகுப்பில் பங்கேற்ற மாணவர்கள், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுடன் இன்று (03.02.2023) சென்னை சேத்துப்பட்டில் உள்ள உலகப் பல்கலைக்கழக சேவை மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துரையாடினர்.
தில்லியில் குடியரசுத் தின அணிவகுப்பில் பங்கேற்று தாங்கள் பெற்ற அனுபவங்களை பகிர்ந்து கொண்ட மாணவர்களுக்கு அமைச்சர் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.
இதையும் படிக்க- 'அரசு விரைவுப் பேருந்துகளின் இருப்பிடத்தையும் சென்னை பஸ் செயலியில் அறிந்து கொள்ளும் வசதி'
இந்நிகழ்வில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பேசும் போது :- குடியரசுத் தின அணிவகுப்பில் பங்கேற்ற மாணவர்களுக்கு வாழ்த்துக்கள். அங்கு பெற்ற அனுபவங்களை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும். அப்போது தான் இது போன்ற நிகழ்வுகள் மற்றும் வாய்ப்புகள் குறித்து அறிந்து கொள்ள வாய்ப்பாக அமையும்.
சுய ஒழுக்கத்துடனும், திறமைகளுடனும் இருப்பதால் மட்டுமே உங்களுக்கு இது போன்ற வாய்ப்பு கிடைத்துள்ளது. மேலும் திறமைகளை வளர்த்து மேன்மேலும் பல சாதனைகளை படைத்து தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் எனக் கூறினார்.
இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ.மேகநாத ரெட்டி, மாநில நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் முனைவர் ம.செந்தில்குமார், மாநில திட்ட ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரமூர்த்தி, மண்டல இயக்குநர் திரு.சாமுவேல் செல்லையா ஆகியோர் உடனிருந்தனர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.