எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஒரு பேச்சும், ஆளுங்கட்சியாக மாறியபிறகு வேறு பேச்சும், முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசுவதாக அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, ''அதிமுக ஆட்சி செய்தபோதுகூட அடுத்தடுத்த புயலால் விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். ஆனால் அவர்களுக்கு மத்திய அரசு வழங்கிய தொகையை விட அதிக இழப்பீட்டுத் தொகையை வழங்கியது அதிமுக அரசு.
பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் அதிக இழப்பீட்டுத் தொகை பெற்றுத்தந்தது எங்கள் தலைமையிலான அதிமுக அரசுதான். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஹெக்டருக்கு ரூ.30 ஆயிரம் வழங்கப்படும் என ஸ்டாலின் கூறியிருந்தார். ஆனால். ரூ.20 ஆயிரம்தான் வழங்கப்பட்டது.
எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஒரு பேச்சும், முதல்வரான பிறகு வேரு பேச்சும் பேசுகிறார் மு.க. ஸ்டாலின்'' என்று விமர்சித்தார்.
நாடாளுமன்றத் தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி
தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிசாமி, தேர்தல் பிரசார்த்தில் அதிமுக நிர்வாகிகள் ஈடுபட்டு வருகின்றனர். இடைத்தேர்தல் வெற்றி நாடாளுமன்றத் தேர்தலிலும் தொடரும். பாரதிய ஜனதா கட்சியுடனே நாடாளுமன்றத் தேர்தலிலும் அதிமுக கூட்டணி இருக்கும் எனக் குறிப்பிட்டார்.