தமிழ்நாடு மக்களின் நம்பிக்கைக்கு காவல்துறை பாத்திரமாக வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து ஆய்வுக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்றது.
ஆய்வுக் கூட்டத்தில் முதல்வர் பேசுகையில்,
காவல்துறையின் சிறப்பான, பாரபட்சமற்ற, திறமையான, துரிதமான பணியே, மக்களிடம் காவல்துறைக்கும் அரசுக்கும் நல்ல பெயரை ஈட்டித் தரும்.சட்டம்-ஒழுங்கிற்கு சவால் விடும் எந்த சக்திகளையும் எக்காரணம் கொண்டும் அனுமதிக்கக் கூடாது. எவ்விதத் தயக்கமும் இன்றி நடவடிக்கை எடுக்கும் அதே நேரத்தில், “குற்றத் தடுப்பு நடவடிக்கைகளில்” மாவட்ட, மாநகரத்தில் உள்ள காவல் கண்காணிப்பாளர்கள், மாநகரக் காவல் ஆணையர்கள் முழுக் கவனம் செலுத்திட வேண்டும்.
புகார் அளிக்க வரும் ஏழை, எளிய மக்கள், குறிப்பாகப் பெண்கள் நடவடிக்கை கோரி அணுகும்போது, அவர்களை மனிதநேயத்தோடு அணுகி அவர்களது புகாரைப் பதிவு செய்து, உரிய மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த அணுகுமுறை தான் காவல் துறையை மக்களுக்கு நண்பனாக்கும் என்று தெரிவித்தார்.
மக்களின் நம்பிக்கைக்கு முழுமையாக நீங்கள் பாத்திரமாக வேண்டும். காவல் நிலையத்திற்குச் சென்றால், நியாயம் கிடைக்கும் என்ற நிலை ஒவ்வொரு காவல் நிலையத்திலும் உருவாக்கப்பட வேண்டும். இதனை காவல் துறைத் தலைவர் உறுதி செய்திட வேண்டும். இதைத்தான் நான் உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன். இதைத்தான் மக்களும் உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறார்கள். இதை நீங்கள் செய்ய வேண்டும். செய்வீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
இந்த ஆய்வுக்கூட்டத்தில், தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, இ.ஆ.ப., உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் . க.பணீந்திர ரெட்டி, சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், காவல்துறை மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.