ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக தனித்து களம் காண்கிறது என முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.
ஈரோடு பி.பெ.அக்ரஹாரம் பகுதியில் சனிக்கிழமை நடைபெற்ற நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் எம்எல்ஏ செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் முடிவை உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் எதிர்பார்த்துள்ளனர். திண்டுக்கல் மக்களைத் தொகுதி இடைத்தேர்தல் எம்ஜிஆர்க்கு திருப்புமுனையை உருவாக்கியதுபோல், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக மகத்தான வெற்றிபெற்று எடப்பாடி பழனிசாமி தலைமைக்கு திருப்புமுனையை ஏற்படுத்தும். இந்த தேர்தல் தமிழகத்தில் மாற்றத்தை உருவாக்கும்.
இதையும் படிக்க | ஈவிகேஎஸ் இளங்கோவன் பிப்.3 ஆம் தேதி வேட்பு மனு தாக்கல்!
அதிமுக இந்த இடைத்தேர்தலில் தனித்து களம் காண்கிறது. எங்கள் கூட்டணியில் இணையும் கட்சிகள் குறித்து எடப்பாடி பழனிசாமி விரைவில் அறிவிப்பார். அதிமுகவில் 98.5 சதவீதம் பேர் எடப்பாடி பழனிசாமி தலைமையை ஏற்றுக்கொண்டு கட்சிப்பணியாற்றி வருகின்றனர்.
வாக்கு சேகரிக்கும் பணியை வெள்ளிக்கிழமை இரவே தொடங்கிவிட்டோம். பிற மாவட்டங்களில் இருந்து வந்துள்ள கட்சி நிர்வாகளும் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
தேர்தல் பணியில் எங்கள் வேகம், விவேகம் ஓரிரு நாள்களில் அனைவருக்கும் தெரியும். எங்களுக்குதான் இரட்டை இலை சின்னம் கிடைக்கும் என்று செங்கோட்டையன் கூறினார்.