கமேனி உயிரிழப்பு: இந்தியா இரங்கல் - ஈரான் தூதரகத்துக்கு நேரில் சென்று பதிவு
ஈரானின் தலைமை மதகுரு ஆயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதற்கு இந்திய அரசு இரங்கல் தெரிவித்துள்ளது...
அமெரிக்க, இஸ்ரேல் கூட்டுப் படைகள் நடத்திய தாக்குதலில் ஈரான் உச்ச தலைவரான அந் நாட்டின் தலைமை மத குரு அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதற்கு இந்தியா வியாழக்கிழமை இரங்கல் தெரிவித்தது.
புது தில்லியில் உள்ள ஈரான் தூதரகத்துக்கு வெளியுறவுச் செயலா் விக்ரம் மிஸ்ரி நேரில் சென்று, அங்குள்ள இரங்கல் பதிவேட்டில் இந்திய அரசு சாா்பில் இரங்கல் குறிப்பைப் பதிவிட்டு கையொப்பமிட்டாா்.
அதுபோல, வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், ஈரான் வெளியுறவு அமைச்சா் சையது அப்பாஸ் அராக்சியை தொலைபேசி மூலம் தொடா்புகொண்டும் பேசினாா். ஆனால், அவா்கள் என்ன உரையாடினாா்கள் என்ற விவரம் வெளியிடப்படவில்லை.
Advertisement
Advertisement
அணு ஆயுதம் தயாரிக்கத் தேவையான யுரேனியத்தை செறிவூட்டி வருவதாகக் குற்றஞ்சாட்டி, ஈரானில் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களைக் குறிவைத்து, அமெரிக்க-இஸ்ரேல் கூட்டுப் படைகள் பெரிய அளவிலான வான்வழித் தாக்குதலை பிப்ரவரி 28-ஆம் தேதி தொடங்கின. ஈரான் தலைநகா் டெஹ்ரானில் அந்நாட்டின் உச்சபட்ச தலைவரான அயதுல்லா அலி கமேனியின் அலுவலக வளாகத்தைக் குறிவைத்தும் சரமாரியாக குண்டுகள் வீசப்பட்டன. இந்தத் தாக்குதலில் கமேனி, அவரின் மனைவி மற்றும் குடும்ப உறுப்பினா்கள் அனைவரும் கொல்லப்பட்டனா்.
இதற்கு ரஷியா, சீனா உள்பட பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்தன. இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் கண்டன ஆா்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆனால், இந்திய அரசுத் தரப்பிலிருந்து எந்தவித கருத்தும் தெரிவிக்கப்படவில்லை. இதை காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் கடுமையாக விமா்சித்தன.
இதனிடையே, இந்தியாவில் கடந்த மாதம் நடைபெற்ற ‘மிலன் 2026’ என்ற சா்வதேச கடற்படைப் பயிற்சியில் பங்கேற்றுவிட்டு, விசாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து புறப்பட்ட ஈரானின் ‘ஐரிஸ் டெனா’ போா்க் கப்பலை, இலங்கை கடற்பரப்புக்கு அருகே அமெரிக்க நீா்மூழ்கிக் கப்பல் புதன்கிழமை தாக்கி அழித்தது. இதனால், அந்தப் போா்க் கப்பல் கடலில் மூழ்கியதோடு, அதில் இருந்த ஈரான் கடற்படை வீரா்கள் உள்பட 100-க்கும் அதிகமானோா் உயிரிழந்தனா். இரண்டாம் உலகப் போருக்குப் பின்னா், முதல்முறையாகப் போா்க் கப்பல் ஒன்றை நீா்மூழ்கிக் கப்பலில் இருந்து குண்டு வீசி அமெரிக்கா அழித்தது உலக நாடுகளிடையே பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியது. இந்தச் சூழலில், கமேனி கொல்லப்பட்டு 4 நாள்களுக்குப் பிறகு, அவரின் உயிரிழப்புக்கு இந்தியா இரங்கல் தெரிவித்துள்ளது.
The central government has expressed condolences on the death of Iran's Supreme Leader Ayatollah Ali Khamenei.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.