சென்னை: மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்காமல் இருப்பவர்களுக்காக பிப்ரவரி 15ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்படுவதாக தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, தமிழகத்தில் இதுவரை மின் இணைப்பு எண்ணுடன் 90.69 சதவீதம் பேர் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர்.
குடிசைகளுக்கான மின் இணைப்பு எண்ணுடன் இன்னும் பலரும் தங்களது ஆதார் எண்ணை இணைக்கவில்லை. அது மட்டுமல்லாமல், விவசாயத்துக்கான மின் இணைப்பு வைத்திருப்பவர்களில் சுமார் 5 லட்சம் பேர் இன்னும் ஆதார் எண்ணை இணைக்கவில்லை.
எனவே, மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்காதவர்களுக்காக, இன்றுடன் நிறைவடைவதாக இருந்த கால அவகாசம் பிப்ரவரி 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மின் இணைப்பு எண்ணுடன் ஆதாா் எண்ணை இணைப்பதற்கு ஜனவரி 31-ஆம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. அதன்படி, தமிழ்நாடு மின்சார வாரியம் வழங்கிய அவகாசம், செவ்வாய்க்கிழமையுடன் நிறைவடைகிறது. திங்கள்கிழமை நிலவரப்படி, 2.34 கோடிக்கும் அதிகமான மின் இணைப்புகள், ஆதாா் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்திருந்தது.
இதுவரை மொத்தமாக 87.44 சதவீத மின் நுகா்வோா்கள், தங்களது மின் இணைப்பு எண்ணுடன் ஆதாா் எண்ணை இணைத்துள்ளதாகவும், இதுவரை இணைக்காவதவா்கள், விரைந்து இணைக்க வேண்டும் என்றும் தனது ட்விட்டரில் அமைச்சா் வி.செந்தில் பாலாஜி நேற்று வேண்டுகோள் விடுத்திருந்தார்.
10 சதவீதத்துக்கும் அதிகமானோா் இன்னும் தங்களது மின் இணைப்பு எண்ணுடன் ஆதாா் எண்ணை இணைக்க வேண்டியிருப்பதால், 15 நாள்களுக்கு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.