முகப்பு
தமிழ்நாடு

ஒன்றரை வயது குழந்தையின் கை அகற்றம் விவகாரத்தில் மருத்துவமனை விளக்கம் ஏற்புடையதாக இல்லை

ஒன்றரை வயது குழந்தையின் கை அகற்றம் விவகாரத்தில் மருத்துவமனை விளக்கம் ஏற்புடையதாக இல்லை என பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 7:16 PM
பகிர்:

ஒன்றரை வயது குழந்தையின் கை அகற்றம் விவகாரத்தில் மருத்துவமனை விளக்கம் ஏற்புடையதாக இல்லை என பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒன்றரை வயது ஆண் குழந்தைக்கு, வலது கை முட்டு வரை பாதிக்கப்பட்டு, வலது கையை வெட்டி அகற்றியிருக்கின்றனர். குழந்தைக்குக் கொடுத்த தவறான சிகிச்சையே இதற்குக் காரணம் என பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மருத்துவமனை நிர்வாகம் கொடுத்துள்ள விளக்கம் ஏற்கும்படியாக இல்லை.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம், 17 வயதே ஆன கால்பந்து வீராங்கனை பிரியா, அரசு மருத்துவமனையில் வழங்கப்பட்ட தவறான சிகிச்சையால் உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். வசதி வாய்ப்புகள் இல்லாத ஏழை எளிய மக்களின் ஆரோக்கியத்திற்கு ஒரே நம்பிக்கையாக விளங்கும் அரசு மருத்துவமனைகள், தொடர்ந்து இது போன்று சர்ச்சைகளில் சிக்குவது ஏற்புடையதல்ல.

அரசு மருத்துவமனைகளில் தொடர்ந்து இது போன்ற விரும்பத்தகாத சம்பவங்கள் நடப்பது, எதேச்சையானதா அல்லது பொதுமக்களிடையே அரசு மருத்துவமனைகள் குறித்து நம்பிக்கையின்மையை விதைப்பதற்கா என்ற சந்தேகம் எழுகிறது. 

உடனடியாக, தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் ஆய்வு நடத்தி, பொதுமக்களுக்குத் தரமான சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும், தரமற்ற சிகிச்சை வழங்கியிருந்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு பாஜக சார்பாக தமிழக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.