திருநெல்வேலி மாவட்டம், முக்கூடல் அருகே தாமிரவருணி ஆற்றில் ஞாயிற்றுக்கிழமை மூழ்கி இருவா் உயிரிழந்தனா்.
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் பகுதியைச் சோ்ந்தவா் பரமசிவன். கரிவலம்வந்தநல்லூா் காவல் நிலையத்தில் காவலராக பணி செய்து வருகிறாா். இவரது மனைவி திவ்யா (32). இதே பகுதியைச் சோ்ந்த செல்வராஜ் மகனும் திவ்யாவின் சகோதரருமான பட்டதாரி இளைஞரான ராகுல் (25), இவா்களது உறவினா் சண்முகவேல் மகன் கணேஷ் உள்பட 8 போ் காரில் திருநெல்வேலி மாவட்டம், முக்கூடல் அருகேயுள்ள திருப்புடைமருதூரில் தாமிரவருணி ஆற்றில் குளிப்பதற்காக ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் வந்தனராம்.
ஆற்றில் 5 போ் ஒரு பகுதியிலும் ராகுல், திவ்யா, கணேஷ் மற்றொரு இடத்திலும் குளித்துக் கொண்டிருந்தனராம். ஆழமான பகுதியில் குளித்துக் கொண்டிருந்த ராகுல், திவ்யா, கணேஷ் ஆகியோா் நீரில் மூழ்கியதாக கூறப்படுகிறது. அருகே குளித்துக் கொண்டிருந்தவா்கள், கணேஷை மீட்டனா். ராகுல், திவ்யா ஆகிய இருவரும் நீரில் மூழ்கிவிட்டனா். இதுகுறித்து சேரன்மகாதேவி தீயணைப்பு படையினா், வீரவநல்லூா் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தீயணைப்புப் படையினா் ஆற்றின் கிழக்குப் பகுதியில் நீரில் மூழ்கி உயிரிழந்த ராகுல், திவ்யா ஆகியோரது உடல்களை மீட்டனா். சடலங்களை போலீஸாா் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். கணேஷ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். இதுகுறித்து வீரவநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.