உண்மைகளை மறைத்துள்ளார் டி.ஆர்.பாலு: அண்ணாமலை குற்றச்சாட்டு!
அண்ணாமலை, கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி டிஎம்கே பைல்ஸ் என்ற பெயரில் திமுகவினரின் சொத்துப் பட்டியலை வெளியிட்டார்.
திமுக எம்.பி டி.ஆர்.பாலு தொடர்ந்த அவதூறு வழக்கு தொடர்பாக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் இன்று (ஜூலை 14) ஆஜரானார்.
அண்ணாமலை, கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி டிஎம்கே பைல்ஸ் என்ற பெயரில் திமுகவினரின் சொத்துப் பட்டியலை வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து அண்ணாமலை மீது திமுக எம்.பி டி.ஆர்.பாலு அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், அண்ணாமலை இன்று நீதிமன்றத்தில் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி, மூன்றாவது வாரத்துக்கு வழக்கை ஒத்திவைத்தார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, ஊழலை வெளியிட்டதால், ஆளும் கட்சியினரின் பலர் கோபமடைந்துள்ளனர். ஊழல் பட்டியல் அடுத்தக்கட்டத்து சென்றுள்ளது.
பாலு தாக்கல் செய்த மனுவில் அவரின் சொத்து மதிப்புகள் தொடர்பான உண்மைகளை மறைத்துள்ளார். முழுமையாக வெளிப்படவில்லை. 2004 - 2009 வரை ஊழல் செய்ததால்தான் மத்திய அமைச்சரவையில் டி.ஆர். பாலு சேர்க்கப்படவில்லை. மு.க. அழகிரியும் ஒரு பேட்டியில் இதைத் தெரிவித்துள்ளார்.
டி.ஆர். பாலு தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தில் 3 நிறுவனங்களின் பங்குதாரர்களாக உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அவரின் இரு மகன்கள் எந்தெந்த நிறுவனத்தின் பங்குதாரர்களாக உள்ளனர் என்பதை குறிப்பிடவில்லை.
இது வாரிசு அரசியலால் உருவான 3ஆம் தலைமுறைக்கும் முதல் தலைமுறைக்கும் நடக்கும் யுத்தம். இது கடந்த சில நாள்களாக நடைபெற்றுவருவது இல்லை. பணபலம் படைத்தவர்களுக்கு எதிரான நீண்ட காலம் நடைபெறுவது. டிஎம்கே பைல்ஸ் பாகம் 2 விரைவில் வெளியிடப்படும். அதில் பினாமிகள் பெயரில் ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்களின் ஊழல் பட்டியலிடப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டார்.