முகப்பு
தமிழ்நாடு

விடிய விடிய பற்றியெரியும் புதுக்கோட்டை குப்பைக் கிடங்கு: புகை மூட்டத்தால் மக்கள் அவதி

புதுக்கோட்டை நகராட்சியின் 13 ஏக்கர் குப்பைக் கிடங்கான, திருக்கட்டளை குப்பைக் கிடங்கில் வெள்ளிக்கிழமை இரவு திடீரென தீப்பிடித்தது.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 11:48 AM
பகிர்:

புதுக்கோட்டை: புதுக்கோட்டை நகராட்சியின் 13 ஏக்கர் குப்பைக் கிடங்கான, திருக்கட்டளை குப்பைக் கிடங்கில் வெள்ளிக்கிழமை இரவு திடீரென தீப்பிடித்தது. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் விடிய விடிய தீயை அணைக்க முற்பட்டும் புகை மூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

புதுக்கோட்டை நகராட்சியின் குப்பைக் கிடங்கு திருக்கட்டளையில் 1959 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. 13 ஏக்கர் பரப்பளவுள்ள இந்தக் குப்பைக் கிடங்கில் சுமார் 12 அடி உயரத்தில் குப்பைகள் மலைபோல் குவிந்திருக்கின்றன.

நகராட்சியின் சார்பில் குப்பைகளை தரம் வாரியாகப் பிரிக்கும் பணி ஒரு பக்கம் நடைபெற்று வருகிறது.

திடீரென தீப்பிடித்து எரியும் திருக்கட்டளை குப்பைக் கிடங்கு

இந்தக் குப்பைக் கிடங்கில் ஆண்டுதோறும் கோடைகாலத்தில் தீப்பிடித்து எரிவதும், இதனால் அருகேயுள்ள கிராம மக்கள் கடும் அவதிக்குள்ளாவதும் வழக்கம்.

தீ புகைமூட்டத்தில் வாகனங்களை ஓட்டிச் செல்வதற்கு அவதிக்குள்ளாகும் வாகன ஓட்டிகள்.

இந்த நிலையில், தற்போது வெள்ளிக்கிழமை இரவு குப்பைக் கிடங்கின் ஒரு பகுதியில் தீப்பிடித்தது. நன்றாகக் காய்ந்திருந்த குப்பை மேடு என்பதால் தீ மளமளவெனப் பரவியது. அதேநேரத்தில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடும் புகைமூட்டம் காணப்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்து வந்த தீயணைப்பு வாகனங்கள், நகராட்சியின் தண்ணீர் லாரிகள் இணைந்து தண்ணீரைப் பீய்ச்சியடித்து தீயைக் கட்டுப்படுத்த முயன்று வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.