சேலம் ஓமலூரில் மதுபோதையில் நடந்த தகராறில் சாலையில் விழுந்தவர் மீது தனியார் பேருந்து ஏறி இறங்கியதால் தலை நசுங்கி பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் பகுதியை சேர்ந்தவர் மாது. கூலித்தொழிலாளியான இவர் டவர் கட்டுமான பணிக்காக ஓமலூர் பகுதியில் தங்கி வேலை செய்து வந்துள்ளார். நேற்று இரவு மாதுவும் அவருடன் வேலை செய்யும் சக ஊழியர்களான காரிமங்கலத்தை சேர்ந்த காமராஜ்,செந்தில்குமார் ஆகிய மூவரும் ஓமலூர் பேருந்து நிலையம் அருகே ஒன்றாக மது அருந்தி உள்ளனர்.
இதையும் படிக்க: நீதிமன்றங்களில் காந்தி, திருவள்ளுவர் படங்கள் மட்டுமே வைக்கப்பட வேண்டும்: உயர் நீதிமன்றம்
பின்னர் அவர்கள் பேருந்து நிலையம் எதிரே தர்மபுரி சாலையில் உள்ள ஓட்டலில் உணவு அருந்திய போது அவர்களுக்குள் வாய்தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. உணவு அருந்தியப்பின் ஓட்டலை விட்டு வெளியே வந்த பிறகும் இவர்களுக்குள் தகராறு முற்றி கைகலப்பாக மாறி உள்ளது.
இதையும் படிக்க: இந்திய மகளிரணி கேப்டன் ஸ்டம்பினை பேட்டால் அடித்து நடுவர் தீர்ப்புக்கு எதிர்ப்பு: வைரல் விடியோ!
இந்த கைகலப்பில் எதிர்பாராத விதமாக மாது சாலையில் விழுந்தார்.அப்போது சாலையில் விழுந்த மாதுவின் தலை மீது சேலத்திலிருந்து தர்மபுரி நோக்கி சென்ற தனியார் பேருந்தின் சக்கரம் ஏறி இறங்கியது. இதில் மாது சம்பவ இடத்திலேயே மூளை சிதறி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து அவருடன் வந்த சக ஊழியர்களான செந்தில்குமார்,காமராஜ் இருவரும் அங்கிருந்து தப்பி ஓடிய நிலையில், அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் அவர்களை துரத்தி மடக்கிப் பிடித்து தர்ம அடி கொடுத்தநிலையில், தகவலறிந்து சம்பவ இடத்திற்க்கு வந்த ஓமலூர் காவல்துறையினர் பொதுமக்களிடம் இருந்து மீட்டனர்.
விபத்தில் பலியான மாதுவின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் தனியார் பேருந்தின் ஓட்டுனரும், நடத்துனரும் ஓமலூர் காவல் நிலையத்தில் சரணடைந்தனர்.
தனியார் பேருந்தை காவல்நிலையம் கொண்டு சென்ற காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.இந்த விபத்தின் காரணமாக ஓமலூர், தர்மபுரி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.