கிருஷ்ணகிரி வெடிவிபத்து: பலியானோர் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிவாரணம்!
கிருஷ்ணகிரி வெடி விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பட்டாசுக் கடையில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் மற்றும் நிதியுதவி அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக முதல்வர் வெளியிட்ட அறிக்கையில்,
கிருஷ்ணகிரி பழையபேட்டை முருகன் கோயில் செல்லும் சாலையில் உள்ள போகனப்பள்ளி கிராமத்தில் இயங்கிவரும் தனியாருக்குச் சொந்தமான பட்டாசுக் கடையில் இன்று காலை எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் 8
பேர் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.
மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்பார்வையிட்டு துரிதப்படுத்த உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி சென்றுள்ளார்.
மேலும், இவ்விபத்தில் படுகாயமடைந்து கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்களுக்குச் சிறப்பு சிகிச்சை அளிக்கவும் அறிவுறுத்தியுள்ளேன்.
உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு அவர்களது குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சமும், படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்களுக்கு ரூ.1 லட்சம், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன். என்று அவர் கூறியுள்ளார்.