செந்தில் பாலாஜியை பரிசோதிக்கும் எய்ம்ஸ் குழு!
அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலையை பரிசோதிக்க எய்ம்ஸ் மருத்துவக் குழுவினர் இன்று தமிழகம் வருகின்றனர்.
அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலையை பரிசோதிக்க எய்ம்ஸ் மருத்துவக் குழுவினர் இன்று தமிழகம் வருகின்றனர்.
மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக 17 மணிநேரத்துக்கும் மேலாக அவரது வீடு மற்றும் தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அறையில் அமலாக்கத் துறையினரால் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அவரது அறையில் இருந்து 3 பைகளில் இருந்து ஆவணங்களை அமலாக்கத் துறையினர் எடுத்துச் சென்றனர்.
17 மணி நேர சோதனைக்குப் பிறகு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்துக்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு திடீரென உடல் நலக் குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. நெஞ்சு வலிப்பதாக கூறிய அமைச்சர் செந்தில் பாலாஜியை சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
உயர் ரத்த அழுத்தம் மற்றும் நெஞ்சுவலி காரணமாக தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜிக்கு எடுக்கப்பட்ட இசிஜி நிலையாக இல்லை என்றும், சுயநினைவின்றி காணப்படுவதாகவும் மருத்துவமனையில் செந்தில் பாலாஜியை சந்தித்த அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து, மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஓமந்தூரார் மருத்துவமனையின் மருத்துவர்கள் செந்தில் பாலாஜிக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்நிலையில், மத்திய அரசின் சுகாதாரத்துறையின் கீழ் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் மருத்துவர்கள் செந்தில் பாலாஜியை பரிசோதிக்க இன்று காலை 11 மணியளவில் ஓமந்தூரார் மருத்துவமனைக்கு வருகை தரவுள்ளனர்.
அவர்களின் ஆலோசனைப்படி, செந்தில் பாலாஜிக்கு சென்னையில் சிகிச்சை அளிக்கப்படுமா அல்லது தில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்படுவாரா என்பது குறித்து அமலாக்கத்துறை முடிவெடுக்கும் எனத் தெரிகின்றது.