சமூக வலைதளத்தில் நிறைய தவறான செய்திகள் வரும். அதில் எதை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும் என நடிகர் விஜய் மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார்.
10 மற்றும் 12ஆம் வகுப்புகளில் தொகுதி வாரியாக முதன்மை மதிப்பெண் எடுத்த மாணவர்களை அங்கீகரிக்கும் விதமாக விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.
இதில் நடிகர் விஜய் பேசியதாவது, புத்தகங்களைத் தாண்டி மாணவர்கள் நிறைய படிக்க வேண்டும். அம்பேத்கர், பெரியார், காமராஜர் போன்ற தலைவர்களைப் பற்றி மாணவ, மாணவிகள் படித்து தெரிந்து கொள்ள வேண்டும்.
நாளைய வாக்காளர்கள் நீங்கள்தான். அடுத்தடுத்து புதிய நல்ல தலைவர்களை நீங்கள் தான் தேர்ந்தெடுக்க போகிறீர்கள். ஆனால் நம்முடைய விரலை வைத்தே நம் கண்ணை குத்துவது தான் இப்போது நடந்துகொண்டிருக்கிறது. அதுதான் காசு வாங்கிவிட்டு ஓட்டு போடுவது.
ஒவ்வொரு மாணவ, மாணவியரும் தங்கள் பெற்றோரிடம் 'காசு வாங்கி ஓட்டு போடக்கூடாது' என்று சொல்ல வேண்டும். முயற்சி செய்து பாருங்கள், நீங்கள் சொன்னால் கண்டிப்பாக நடக்கும். எதிர்காலத்தில் நீங்கள் தான் முதல்தலைமுறை வாக்காளர்கள்.
இது நடந்தால் மட்டுமே கல்விமுறை ஒரு முழுமையடைந்ததாக உணர முடியும்.
உங்கள் அருகில் இருக்கும் தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு சொல்லிக்கொடுத்து அவர்களுக்கு நம்பிக்கை அளியுங்கள். அதுவே நீங்கள் எனக்கு கொடுக்கும் பரிசு.
மாணவர்கள் எந்த சூழ்நிலையிலும் தவறான முடிவு எடுக்காதீர்கள். உங்களால் இது முடியாது என்று சொல்வதற்கு ஒரு கூட்டம் இருக்கும். அதை எடுத்துக்கொள்ளாதீர்கள்' என்று பேசியுள்ளார்.