வத்திராயிருப்பு: கணவன் இறந்த துக்கத்தில் 2 மகள்கள், மகனுடன் கிணற்றில் குதித்து தாய் தற்கொலை
வத்திராயிருப்பு அருகே கணவன் இறந்த துக்கத்தில் இரு மகள்கள் மற்றும் ஒரு மகனுடன் தாய் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர்.
வத்திராயிருப்பு அருகே கணவன் இறந்த துக்கத்தில் இரு மகள்கள் மற்றும் ஒரு மகனுடன் தாய் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே கோட்டையூர் பகுதியைச் சேர்ந்தவர் ஈஸ்வரன்(40). இவரது மனைவி பாண்டீஸ்வரி(35). இவர்களுக்கு வைத்தீஸ்வரி(16), காளீஸ்வரி(11) ஆகிய இரு மகள்களும், விக்னேஸ்வரன்(1) என்ற மகனும் உள்ளனர்.
ஈஸ்வரன் தனக்கு சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்து வந்தார். வைத்தீஸ்வரி 11- ம் வகுப்பும், காளீஸ்வரி 6-ம் வகுப்பும் படித்து வந்தனர். கடந்த ஒரு மாதமாக உடல்நிலை சரியில்லாமல் மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஈஸ்வரன், கடந்த 15-ம் தேதி சிகிச்சை பலனின்றி பலியானார்.
கணவர் பலியான துக்கத்தில் இருந்த பாண்டீஸ்வரி சனிக்கிழமை காலை தங்களது விவசாய கிணற்றில் 3 குழந்தைகளுடன் குதித்து தற்கொலை செய்து கொண்டார். போலீஸார் பலியானவர்களின் சடலங்களை மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வத்திராயிருப்பு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.