இலவச வீட்டு மனை பட்டா வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
கோவில்பட்டி வட்டத்திற்கு உட்பட்ட ஏழை எளிய மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வலியுறுத்தி திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவில்பட்டி வட்டத்திற்கு உட்பட்ட ஏழை எளிய மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வலியுறுத்தி திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மூவேந்தர் மருதம் முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவர் அன்புராஜ் தலைமை வகித்தார். பொதுச்செயலர் செல்லப்பா, மாவட்டச் செயலர் பேச்சிமுத்து, மாநிலத் துணைப் பொதுச் செயலர் பொன்னுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் கோவில்பட்டி வட்டத்திற்கு உட்பட்ட வீடு இல்லாத ஏழை எளிய மக்களுக்கு அரசு வழங்கும் இலவச வீட்டு மனை பட்டாவை உடனடியாக வழங்க வேண்டும், விண்ணப்பம் முறையாக விசாரித்து தகுதியுள்ள நபர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா காலதாமதம் இன்றி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திக் கோஷமிட்டனர்.
பின்னர், ஆர்ப்பாட்ட குழுவினர் கோட்டாட்சியர் (பொ) ஜெயாவிடம் கோரிக்கை மனு அளித்தனர். இதில், மூவேந்தர் மருதம் முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த மாவட்ட இளைஞரணி செயலர் பால்துரை, மாநிலக் கொள்கை பரப்புச் செயலர் முனியசாமி, தென்மண்டல மகளிர் அணி செயலர் சுப்புலட்சுமி, மாவட்ட மகளிர் அணி செயலாளர் அமுதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.