தூத்துக்குடி: தூத்துக்குடி காய்கனி சந்தையில் தக்காளி வரத்து குறைவு காரணமாக சில்லறை விற்பனையில் கிலோ ரூ.100க்கு விற்கப்பட்டதால் பொதுமக்கள் பாதிப்படைந்தனர்.
தூத்துக்குடி காய்கனி சந்தைக்கு ஆந்திரம், கர்நாடகம் உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து, தினமும் சுமார் 2 ஆயிரம் பெட்டி தக்காளி வந்துகொண்டிருந்தது இருந்தது. இந்நிலையில், தக்காளி வரத்து குறைவு காரணமாக, தற்போது 600 பெட்டிகள் மட்டுமே வருகின்றன.
இதன் காரணமாக தூத்துக்குடி காமராஜர் மார்க்கெட்டில் மொத்த விற்பனை சந்தையில் தக்காளி விலை கிலோ ரூ.80 க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை விற்பனையில் ரூ.100க்கு தக்காளி விற்பனை செய்யப்படுகிறது.
இதேப்போன்று, பீன்ஸ் கிலோ ரூ.120, அவரைக்காய் கிலோ ரூ. 100, சின்னவெங்காயம் கிலோ ரூ90 என விற்பனை செய்யப்படுகிறது. இது குறித்து வியாபாரிகள் கூறுகையில், வட மாநிலங்களில் பெய்து வரும் மழை காரணமாக, தக்காளி வரத்து குறைந்து காணப்படுகிறது.
மேலும், வட மாநிலங்களிலும் தேவை அதிகரித்துள்ளதால், தக்காளி விலை மேலும் உயர வாய்ப்புள்ளது எனத் தெரிவித்தனர்.