ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவு பேரதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது என ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்தார்.
அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவு பேரதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. இந்த தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு டெபாசிட் பெற்றது மட்டும் ஆறுதலை அளித்தாலும், இந்த நிலைக்கு எடப்பாடியின் ஆணவப்போக்கும், அவரது ஆதரவாளர்களுமே காரணம். பன்னீர்செல்வம் ஆரம்பம் முதல் ஒற்றுமையை வலியுறுத்தி வந்தார். ஆனால், எடப்பாடியும் அவரது ஆதரவாளர்களும் அதனை விரும்பவில்லை.
ஈரோடு கிழக்கில் எடப்பாடியின் பிரசாரம் மக்களிடம் எடுபடவில்லை என்பதைவிட எடப்பாடியே மக்களிடம் எடுபடவில்லை.
எடப்பாடியை முன்னிறுத்திய அனைத்து தேர்தல்களிலும் தோல்வியைத் தழுவி வருகிறோம். இந்த நிலை தொடர்ந்தால் அதிமுகவை இழந்து விடுவோம் என்ற பயம் ஏற்பட்டுள்ளது.
இதையும் படிக்க | ஈரோடு கிழக்கு இடைத்தோ்தல்: ஈவிகேஎஸ்.இளங்கோவன் அமோக வெற்றி
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இந்த தோல்விக்கு காரணமானவர்களை தொண்டர்கள் தூக்கி ஏறிய வேண்டும்.
பணநாயகம் வென்றது எனக் கூறும் எடப்பாடிக்கு இப்போதுதான் தெரியுமா பணநாயகம் என்று.
தோல்வியை எடப்பாடி தலைவணங்கி ஏற்கிறார். நாங்கள் தலைகுனிந்து ஏற்கிறோம் என்ற பண்ருட்டி ராமச்சந்திரன், எடப்பாடி பழனிசாமி தன்னை சுயபரிசோதனை செய்து இணைப்பிற்கு முன்வர வேண்டும்.
எம்ஜிஆரை கட்சியில் இருந்து நீக்கிய திமுகவால் அவர் உயிரோடு இருக்கும் வரை ஆட்சிக்கு வர முடியவில்லை.
மக்கள் ஆதரவுதான் முக்கியம். பொதுக்குழு உறுப்பினர்கள் முக்கியம் அல்ல என்று பண்ருட்டி ராமச்சந்திரன் கூறினார்.