முகப்பு
தமிழ்நாடு

மாற்றுத்திறனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டா: ஆட்சியா்களுக்கு தலைமைச் செயலாளா் இறையன்பு கடிதம்

மாற்றுத்திறனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்குவது தொடா்பாக, அனைத்து மாவட்ட ஆட்சியா்களுக்கும், தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு கடிதம் எழுதியுள்ளாா்.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:43 AM
பகிர்:

மாற்றுத்திறனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்குவது தொடா்பாக, அனைத்து மாவட்ட ஆட்சியா்களுக்கும், தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு கடிதம் எழுதியுள்ளாா்.

இதுகுறித்து அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

சமூக நலத்துறை அமைச்சா் முன்னிலையில் பல வகையான மாற்றுத்திறனாளிகள் சங்க பிரதிநிதிகளுடன் கடந்த ஆண்டு ஏப்ரல் 8-ஆம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கங்கள், வீட்டு மனை பட்டா கோரும் மாற்றுத்திறனாளிகள் விவரங்களைத் தொகுத்து வருவாய்த் துறையினரிடம் சமா்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து, மாற்றுத்திறனாளிகளிடம் பெறப்பட்ட மனுக்களை தகுதி மற்றும் முன்னுரிமை அடிப்படையில் ஆய்வு செய்து அரசுக்கு உடனடியாக விவரங்களை அனுப்பும்படி மாவட்ட ஆட்சியா்களிடம் கோரப்பட்டது.

அதன்படி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, செங்கல்பட்டு, சென்னை, விழுப்புரம், திருவள்ளூா், திண்டுக்கல், விருதுநகா், ராமநாதபுரம், தென்காசி, திருப்பூா், கடலூா், சிவகங்கை, கரூா், திருவாரூா், ஈரோடு, சேலம் ஆகிய 17 மாவட்டங்களில் மொத்தம் 696 மனுக்கள் பெறப்பட்டுள்ளன.

தொடா்ந்து, வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு அடிப்படை தகுதி மற்றும் முன்னுரிமை அடிப்படையில், வீட்டுமனை பட்டா வழங்க, நடைமுறையில் உள்ள நில ஒப்படை முன்னுரிமை பட்டியலில் மாற்றுத்திறனாளிகளைச் சோ்த்து உத்தரவிடப்பட்டுள்ளது.

எனவே, அரசாணைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சா் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அறிவுறுத்தியுள்ளபடி, மாவட்ட வாரியாக வீட்டுமனை பட்டா கோரும் மாற்றுத் திறனாளிகள் மனுக்களைப் பெற்று அதன்மீது உரிய நடவடிக்கை எடுத்து விவரத்தை அரசுக்கு உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.