தூத்துக்குடி: தூத்துக்குடியில் வழக்குரைஞர் முத்துக்குமார் கொலை வழக்கில் தேடப்பட்டுவந்த முக்கிய குற்றவாளியான ஜெயப்பிரகாஷ் என்பவரை தூத்துக்குடி அருகே காவல் துறை இன்று காலையில் சுற்றிவளைத்து கைது செய்ய முயன்றபோது, போலீசாரை அரிவாலால் தாக்கிப் தப்பிக்க முயன்ற ஜெயப்பிரகாசை காவல் துறை துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர்.
தூத்துக்குடியில் கடந்த பிப்ரவரி மாதம் 22 ஆம் தேதி வழக்குரைஞர் முத்துக்குமார் என்பவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி உத்தரவின் பேரில் குற்றவாளிகளை கைது செய்ய 6 தனிப்படை அமைத்து காவல் துறை தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் 5 பேர் ஏற்கனவே நீதிமன்றத்தில் சரணடைந்த நிலையில் 3 பேரை காவல் துறை வெவ்வேறு இடங்களில் கைது செய்தனர்.
இந்த வழக்கில் முக்கிய நபரான ஜெயபிரகாஷ் என்பவரைத் தேடி வந்தனர். அவரை காவல் துறை இன்று காலையில் தட்டப்பாரை அருகே துப்பாக்கியால் சுட்டு பிடித்துள்ளதாகவும், அவர் அரிவாளால் வெட்டியதில் 2 போலீசாருக்கு காயம் ஏற்பட்டதாகவும் காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. பின்னர், அவர்கள் 3 பேரையும் காவல் துறை தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
இதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் 2 போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல்.பாலாஜி சரவணன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
தூத்துக்குடி வழக்குரைஞர் முத்துக்குமார் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள ஜெயப்பிரகாஷ் என்பவர், தூத்துக்குடி மாவட்டம் தட்டப்பாறை அருகே உள்ள மறவன் மடம் காட்டுப் பகுதியில் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்குத் தகவல் கிடைத்தது.
இதைத்தொடர்ந்து அந்த பகுதிக்கு சென்ற தனிப்படை காவல் உதவி ஆய்வாளர் ராஜ பிரபு, காவலர் சுடலைமணி உள்ளிட்ட காவல் துறை, ஜெயப்பிரகாசை பிடிக்க முயன்றுள்ளனர். அப்போது ஜெயப்பிரகாஷ் அரிவாளால் தாக்கியதை காவல் துறை தாக்கினார்.
இதில், காவல் உதவி ஆய்வாளர் ராஜபிரபு, காவலர் சுடலை மணி ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து, காவல் துறை, ஜெயப்பிரகாஷை துப்பாக்கியால் சுட்டனர். இதில் முழங்காலுக்கு கீழே காயம் அடைந்த ஜெயபிரகாஷ் கீழே விழுந்துள்ளார்.
உடனடியாக ஜெயப்பிரகாசை பிடித்து, அவரை சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுதித்தனர். மேலும், இந்த சம்பவத்தில் காயமடைந்த காவல் உதவி ஆய்வாளர் ராஜபிரபு, காவலர் சுடலைமணி ஆகியோரும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த கொலை வழக்கில் நேரடி தொடர்புடைய 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், இந்த வழக்கு தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.