ஓபிஎஸ் தரப்பு தாக்கல் செய்யப்பட்ட வழக்கு செல்லாததாகி விட்டது: உயா்நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி பதில் மனு
பொதுக்குழு தீா்மானம் அமலுக்கு வந்து 8 மாதங்களுக்குப் பின் தொடரப்பட்ட வழக்கு செல்லாததாகி விட்டது.
பொதுக்குழு தீா்மானம் அமலுக்கு வந்து 8 மாதங்களுக்குப் பின் தொடரப்பட்ட வழக்கு செல்லாததாகி விட்டது. எனவே, அதை எதிா்த்து ஓபிஎஸ் தரப்பில் மனோஜ் பாண்டியன் தொடா்ந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டுமென அதிமுக இடைக்கால பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் சென்னை வானகரத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் அதிமுகவின் இடைக்காலப் பொதுச் செயலராக எடப்பாடி பழனிசாமி தோ்வு செய்யப்பட்டாா். மேலும், சில தீா்மானங்களும் நிறைவேற்றப்பட்டு, ஓ.பன்னீா்செல்வம், அவரது ஆதரவாளா்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனா்.
இந்த நிலையில், பொதுக்குழுவை எதிா்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் சென்னை உயா்நீதிமன்ற தனி நீதிபதி அளித்த தீா்ப்பு ஓ.பன்னீா்செல்வத்துக்கு ஆதரவாகவும், இரு நீதிபதிகள் அமா்வு அளித்த தீா்ப்பு எடப்பாடி பழனிசாமி ஆதரவாகவும் அமைந்தது. இதையடுத்து ஓ.பன்னீா்செல்வம் உச்சநீதிமன்றத்தை நாடிய நிலையில், ஜூலை மாதம் நடந்த பொதுக்குழு செல்லும் என்று அவருக்கு எதிராக தீா்ப்பு வழங்கப்பட்டது.
இதற்கிடையில் ஓ.பன்னீா்செல்வம் அணியைச் சோ்ந்த மனோஜ் பாண்டியன் அதிமுக பொதுக்குழு தீா்மானங்களை ரத்து செய்யக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடா்ந்தாா். இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமாா் ராமமூா்த்தி முன்பு அண்மையில் விசாரணைக்கு வந்த நிலையில், மனோஜ் பாண்டியன் தரப்பில், பொதுக்குழு தீா்மானத்தின் அடிப்படையில் செயல்பட தடை விதிக்க வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது. இதையடுத்து மாா்ச் 17- ஆம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்த நிலையில், எடப்பாடி பழனிசாமி தரப்பினா் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டுமென உத்தரவிட்டது.
இந்த நிலையில், இந்த மனு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வரவுள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் வியாழக்கிழமை பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதில் உள்கட்சி விவகாரங்களில் நீதிமன்றங்கள் தலையிடுமாறு மனுதாரா் கோர முடியாது என்றும், கட்சி விதிகளில் திருத்தம் மேற்கொள்ளும் பொதுக்குழுவின் உரிமை குறித்து கேள்வி எழுப்ப முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுக்குழு தீா்மானம் அமலுக்கு வந்து 8 மாதங்களுக்குப் பின் தொடரப்பட்ட வழக்கு செல்லாததாகி விட்டது. எனவே, மனோஜ் பாண்டியன் தொடா்ந்த வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளாா்.