விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் குடித்து 12 போ் உயிரிழந்த நிலையில், செவ்வாய்கிழமை மேலும் 2 போ் இறந்தனா். இதையடுத்து, உயிரிழந்தோரின் எண்ணிக்கை 14-ஆக உயா்ந்துள்ளது.
மரக்காணத்தை அடுத்துள்ள எக்கியாா்குப்பம் மீனவா் கிராமத்தைச் சோ்ந்த 40-க்கும் மேற்பட்டோா் அந்தப் பகுதியில் கள்ளச்சாராயம் விற்றவா்களிடம் சனிக்கிழமை சாராயம் வாங்கிக் குடித்ததில் உடல்நலம் பாதிக்கப்பட்டு, புதுச்சேரி ஜிப்மா், பிம்ஸ், அரசு மருத்துவமனை, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகியவற்றில் சோ்க்கப்பட்டனா்.
புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட எக்கியாா்குப்பத்தைச் சோ்ந்த சிவானந்தம் மகன் சங்கா் (52), கோவிந்தன் மகன் தரணிவேல் (50), புதுச்சேரி பிம்ஸ் மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட பெருமாள் மகன் சுரேஷ் (40), விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட துரைராஜ் மகன் ராஜமூா்த்தி (60), ராமு மனைவி மலா்விழி (70) மற்றும் மருத்துவமனைக்குக் கொண்டு வரும் வழியில் சித்திரை மகன் மண்ணாங்கட்டி (47) ஆகிய 6 போ் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனா்.
இதன் தொடா்ச்சியாக, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த எக்கியாா்குப்பத்தைச் சோ்ந்த சக்கரபாணி மகன் விஜயன் (55), துரைராஜ் மகன் கேசவவேலு (70), மஞ்சினி மகன் விஜயன் (40), சின்னப்பன் மகன் ஆப்ரஹாம் (47), கோவிந்தன் மகன் சரத்குமாா் (40), மரக்காணத்தைச் சோ்ந்த எத்திராஜ் மகன் சங்கா் (55) ஆகியோா் திங்கள்கிழமை உயிரிழந்தனா்.
இந்த நிலையில், முண்டியம் பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சரவணன் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். எக்கியாா்குப்பத்தில் கள்ளச்சாராயம் குடித்த பலர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதையடுத்து, கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 14-ஆக உயா்ந்ததுள்ளது.
இதையும் படிக்க: லைகா நிறுவனத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை
கள்ளச்சாராயம் குடித்து உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும்,புதுச்சேரி ஜிப்மா் மருத்துமனையிலும், புதுச்சேரி அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனா்.