முகப்பு
தமிழ்நாடு

கடத்தல் கும்பலை திரைப்பட பாணியில் துரத்திப் பிடித்த காவலர்கள்

சேலம் மாவட்டம் ஏற்காட்டில், கடத்தல் கும்பல் ஒன்றை, காவல்துறையினர் திரைப்பட பாணியில் துரத்திப் பிடித்தனர்.

Updated On : 27 நவம்பர், 2023 at 6:00 PM
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:56 AM

சேலம் : சேலம் மாவட்டம் ஏற்காட்டில், கடத்தல் கும்பல் ஒன்றை, காவல்துறையினர் திரைப்பட பாணியில் துரத்திப் பிடித்தனர்.

சேலம் மாவட்டம் சங்ககிரி சின்னகவுண்டனூர் பகுதியை சேர்ந்த  பிரபு, ரியல்எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர் திடீரென காணாமல் போய்விட்டதாக அவரது மனைவி சம்பூரணம்  சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் கொடுத்தார்.

அந்தப் புகாரைத் தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அமைத்த தனிப்படையினர் பிரபுவை தேடி வந்தனர்.

Advertisement

அதைத் தொடர்ந்து பிரபுவின் செல்போன் சிக்னல் ஏற்காட்டில் காட்டியதைத் தொடர்ந்து ஏற்காடு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து  ஏற்காடு காவல்துறையினர் மற்றும் தனிப்படையினர் ஏற்காட்டில் தேடுதல் வேட்டை நடத்தினர். ஏற்காட்டில் உள்ள வாட்ஸ்அப் குழுக்களில் பிரபுவின் புகைப்படத்தை பதிவிட்டு தேடினார்கள்.

இந்த நிலையில் ஏற்காடு ஒண்டிக்கடை பகுதியில் பிரபுவை ஒரு காரில் கடத்திச் செல்வதை பார்த்த ஆட்டோ ஓட்டுநர்கள் ஏற்காடு காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்ததை தொடர்ந்து அங்குச் சென்ற காவல்துறையினர் பிரபு மற்றும் அவருடன் இருந்த சேலம் சின்ன திருப்பதி பகுதியை சேர்ந்த கண்ணன், அஸ்தம்பட்டியை சேர்ந்த மாபுபஷாக், வசந்த், கார்த்தி, சுரேஷ், பார்திபன் ஆகிய ஆறு பேரை பிடித்து விசாரித்தனர்.

இந்த விசாரணையில் கண்ணன் என்பவர் அடியாட்களை வைத்து பிரபுவை கடத்தி வந்து ஏற்காட்டில் உள்ள தனியார் தாங்கும் விடுதியில் வைத்திருத்ததும், காவல்துறையினர் தேடி வருவதை தெரிந்து கொண்ட கடத்தல் கும்பல் பிரபுவை இடமாற்றம் செய்யும் போது காவல்துறையினரிடம் சிக்கியது தெரிய வந்தது.

பிரபுவை எதற்காக கடத்தினார்கள் என்று விசாரித்ததில் சின்ன திருப்பதி பகுதியை சேர்ந்த கண்ணன் என்பவர் பெரம்பலூர் பகுதியை சேர்ந்த சக்திவேல் என்பவர் மூலம் பிரபுவுக்கு இரண்டரை கோடி ரூபாய் பணம் வட்டிக்கு கொடுத்ததாகவும், அந்தப் பணத்தை பிரபு திருப்பி கொடுக்காததால் கண்ணன், சக்திவேல் மூலம் பிரபுவை சேலத்தில் உள்ள தனியார் பாருக்கு வரவழைத்துள்ளார்.

அதைத் தொடர்ந்து அங்கு வந்த பிரபுவை கண்ணன் மற்றும் அவருடன் வந்த கூலிப்படையினர் ஆறு பேர் கொண்ட கும்பல் பிரபுவை ஸ்கோடா காரில் கடத்திக் கொண்டு ஏற்காடு வந்து அங்கே இருந்த தனியார் தங்கும் விடுதி ஒன்றில் அடைத்து வைத்து அவரது பணத்தை கேட்டதாகவும், அப்போது பிரபு அவர்களிடம் 'கடன் வாங்கிய பணத்தை ஷேர் மார்க்கெட்டில் போட்டு நஷ்டம் ஆகிவிட்டதாகவும்'கூறியுள்ளதை தொடர்ந்து அவரை கண்ணன் மற்றும் அவரது அடியாட்கள் தாக்கியதும் தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து பிரபு மற்றும் அவரை கடத்திய 6 பேரை கொண்ட கும்பலை ஏற்காடு காவல்துறையினர், தனிப்படையினரிடம் ஒப்படைத்தனர். தற்போது கடத்தல் கும்பலிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. திரைப்பட பாணியில் இந்த கடத்தல் கும்பலை துரத்திப் பிடித்த சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.