முகப்பு
தமிழ்நாடு

அரியலூர் பட்டாசு ஆலை விபத்து: நிவாரணம் அறிவிப்பு

அரியலூர் பட்டாசு ஆலை தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தமிழக அரசு சார்பில் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 9 அக்டோபர், 2023 at 5:35 PM
பகிர்:

அரியலூர் பட்டாசு ஆலை தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தமிழக அரசு சார்பில் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் அடுத்த வெ.விரகாலூர் கிராமத்திலுள்ள  பட்டாசு தயாரிக்கும் ஆலையில் இன்று(திங்கள்கிழமை) ஏற்பட்ட தீ விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். 

திருமழபாடி கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவருக்குச் சொந்தமான இந்த பட்டாசு ஆலையில் தீ விபத்து ஏற்பட்டதையடுத்து அங்கு வேலை செய்துகொண்டிருந்த 10 பேர் தப்பித்து வெறியேறினர். மேலும் பலத்த காயத்துடன் வெளியே வந்த 3 பேர் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் மேலும் சிலர் உள்ளே சிக்கியிருப்பதாகவும் தெரிய வருகிறது. இதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது.  

Advertisement

சம்பவ இடத்தில் ஆட்சியர் ஜா.ஆனிமேரி ஸ்வர்ணா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கா.பெரோஸ்கான் அப்துல்லா உள்ளிட்டோர் உள்ளனர். 

இந்நிலையில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்ததுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார். 

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: 

அரியலூர் மாவட்டம், வெற்றியூர் மதுரா, விரகாலூர் கிராமத்தில் இயங்கி வந்த தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் இன்று (9-10-2023) காலை எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட தீவிபத்தில் 9 பேர் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன். விபத்து நடைபெற்ற இடத்திற்குச் சென்று, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளைத் துரிதப்படுத்த போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் மற்றும் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வெ. கணேசன் ஆகிய இருவரையும் அனுப்பி வைத்துள்ளேன். 

மேலும், இவ்விபத்தில் படுகாயமடைந்து, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஐந்து நபர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கவும் அறிவுறுத்தியுள்ளேன்.

இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவர்களது குடும்பத்தினருக்கு தலா மூன்று இலட்சம் ரூபாயும், படுகாயமடைந்தவர்களுக்கு  தலா ஒரு இலட்சம் ரூபாயும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.