எட்டயபுரம் அருகே ராணுவ வீரர் கொலை
எட்டயபுரம் அருகே வெம்பூரில் ராணுவ வீரர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி: எட்டயபுரம் அருகே வெம்பூரில் ராணுவ வீரர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் அருகே வெம்பூர் கிராமத்தைச் சேர்ந்த வேதமுத்து, பாக்கியலட்சுமி தம்பதியரின் மகன் வேல்முருகன். வயது 25. இவர் கடந்த 2017-ஆம் ஆண்டு இந்திய ராணுவத்தில் பணிக்கு சேர்ந்துள்ளார்.
தற்சமயம் ஜம்மு காஷ்மீரில் பணியமர்த்தப்பட்டுள்ளார். கடந்த 1-ஆம் தேதி விடுப்பில் சொந்த ஊரான வெம்பூருக்கு வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று இரவு வீட்டின் மாடி அறையில் தூங்கிக் கொண்டிருந்துள்ளார். அப்போது அதே கிராமத்தைச் சேர்ந்த மாரிச்சாமி என்ற இளைஞர் வேல்முருகன் வீட்டின் வெளிப்புறத்தில் உள்ள மாடிப்படி வழியாக ஏறி மாடிக்குச் சென்று தூங்கிக் கொண்டிருந்த
வேல்முருகனை கத்தியால் சரமாரியாக குத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி உள்ளார். உயிருக்கு போராடிய நிலையில் மாடி அறையில் இருந்து படிக்கட்டுகள் வழியாக கீழே தள்ளாடி நடந்து வந்து சுருண்டு விழுந்துள்ளார்.
வீட்டின் கீழ் பகுதியில் உள்ள அறையில் அவரது தாய் பாக்கியலட்சுமி, சகோதரி முருகவள்ளியும் இதனை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். சில நிமிடங்களிலேயே ராணுவ வீரர் வேல்முருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
குற்றஞ்சாட்டப்பட்ட மாரிச்சாமி
இதுகுறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து எட்டயபுரம் காவல் ஆய்வாளர் ஜின்னா பீர் முகமது சம்பவ இடத்துக்கு வந்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் சம்பவம் நடந்த இடத்தில் போலீசார் தடயங்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்ட ராணுவ வீரர் வேல்முருகனுக்கும் கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிய
மாரிச்சாமிக்கும் பெண் தொடர்பில் முன்விரோதம் இருந்து வந்ததாகவும் அதன் காரணமாக இந்த சம்பவம் நடைபெற்று இருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.
அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க வெம்பூர் கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
விடுப்பில் சொந்த ஊருக்கு வந்த ராணுவ வீரர் சொந்த வீட்டிலேயே குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் வெம்பூர் கிராமத்தில் கடும் அதிர்வலைகளையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.