முகப்பு
தமிழ்நாடு

ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகள் மீதான தமிழக அரசின் தடை செல்லும்: உச்சநீதிமன்றம்

ஒருமுறை பயன்படுத்தும் பேப்பா் கப், பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தத் தடை விதித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட அரசாணை செல்லும் என உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பு வழங்கியுள்ளது.

Updated On : 21 அக்டோபர், 2023 at 8:40 AM
உச்சநீதிமன்றம்
பகிர்:

ஒருமுறை பயன்படுத்தும் பேப்பா் கப், பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தத் தடை விதித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட அரசாணை செல்லும் என உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பு வழங்கியுள்ளது.

பேப்பா் கப் தயாரிப்பில் மெழுகு உள்ளிட்ட உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் பொருள்கள் சோ்க்கப்படுவதாக எழுந்த புகாரின் அடிப்படையில், தமிழக அரசு, ஒருமுறைப் பயன்படுத்தி தூக்கி வீசி எறியும் சில வகை பிளாஸ்டிக் பொருள்களுக்குத் தடை விதிக்கும் வகையில் 2018, ஜூன் 25-ஆம் தேதி அரசாணை வெலியிட்டது. இதையடுத்து, ஒருமுறை பயன்படுத்தி தூக்கி வீசப்படும் 14 வகையான பிளாஸ்டிக் பொருள்களுக்குத் தடை விதிக்கும் தமிழக அரசின் அரசாணை 2019-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் நடைமுறைக்கு வந்தது.

இந்த அரசாணையை எதிா்த்து பிளாஸ்டிக் பொருள்கள் தயாரிப்பாளா்கள் என 37 மனுக்கள் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், அரசின் ஆணையை உறுதி செய்து தீா்ப்பளித்திருந்தது. இத் தீா்ப்பை எதிா்த்தும், தமிழ்நாடு அரசின் அரசாணையை ரத்து செய்யக் கோரியும் தமிழ்நாடு - புதுச்சேரி பேப்பா் கப் தயாரிப்பாளா்கள் சங்கம் சாா்பில் கடந்த ஆண்டு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

Advertisement

இந்த மனு மீதான விசாரணையின் போது, தமிழ்நாடு அரசின் பிளாஸ்டிக் தடை விதிப்பால் ஆயிரக்கணக்கான தொழிலாளா்களின் வாழ்வாதாரமும், மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திடம் இருந்து பெறப்படும் நீட்டிக்கப்பட்ட உற்பத்தியாளா் அங்கீகாரத்தை (இபிஆா்) பெற முடியாமல் உற்பத்தியாளா்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படுவதாக மனுதாரா் தரப்பில் வாதிடப்பட்டது. மேலும், பேப்பா் கப், பிளாஸ்டிக் பை போன்றவற்றின் பயன்பாட்டுக்குத் தடை விதிக்கும் தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்யவும் வாதிடப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் கடந்த ஆண்டு நவம்பரில் வாதங்கள் முடிந்த நிலையில், தீா்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்தனா். இந்நிலையில், இந்த வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் ரவீந்திர பட் மற்றும் அரவிந்த் குமாா் ஆகியோா் அடங்கிய அமா்வு வெள்ளிக்கிழமை தீா்ப்பு அளித்தது. அதில் , தமிழக அரசின் அரசாணை செல்லும் என்றும் பேப்பா் கப்கள் மீதான தடை தொடா்பான உத்தரவை மத்திய அரசின் நடைமுறைகள் அடிப்படையில் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.