காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே பாலாற்றுப் பாலத்தில் வியாழக்கிழமை 2 இருசக்கர வாகனங்கள் நேருக்கு நோராக மோதிக்கொண்டதில் 2 பேர் பலியாகினர்.
காஞ்சிபுரம் அருகே தேனம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் எலக்ட்ரீசியன் ஆனந்தன்(48), இவரது உதவியாளர் சதீஷ்குமார்(17). இருவரும் இருசக்கர வாகனத்தில் களக்காட்டூரில் பணி முடித்து விட்டு பாலாற்றுப் பாலம் வழியாக காஞ்சிபுரம் வந்து கொண்டிருந்தனர்.
அப்போது, எதிரே வந்த களக்காட்டுரைச் சேர்ந்த யோகமூர்த்தியின்(20) இருசக்கர வாகனமும் நேருக்கு நேராக மோதிக்கொண்டது. இதில், பலத்த காயமடைந்த ஆனந்தன் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதையும் படிக்க | கர்நாடகா கோர விபத்து: லாரி மீது கார் மோதியதில் 15 பேர் பலி
விபத்தில் காயமடைந்த மற்ற இருவரையும் அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மீட்டு ஆம்புலன்ஸ் வாகனத்தில் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
யோகமூர்த்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சதீஷ்குமார் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் இருவர் பலியானது தொடர்பாக காஞ்சிபுரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.