பட்டியலின பெண் சமைத்த விவகாரம்: மாணவர்களுடன் அமர்ந்து சாப்பிட்ட கனிமொழி
தூத்துக்குடி உசிலம்பட்டி பள்ளியில் பட்டியலின பெண் சமைத்ததால் மாணவர்கள் சாப்பிட மறுத்த விவகாரத்தில் திமுக எம்.பி. கனிமொழி இன்று அந்த பள்ளிக்குச் சென்று மாணவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டார்.
தூத்துக்குடி உசிலம்பட்டி பள்ளியில் பட்டியலின பெண் சமைத்ததால் மாணவர்கள் சாப்பிட மறுத்த விவகாரத்தில் திமுக எம்.பி. கனிமொழி இன்று அந்த பள்ளிக்குச் சென்று மாணவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டார்.
தூத்துக்குடி மாவட்டம் , எட்டயபுரம் அருகே உசிலம்பட்டி கிரமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. இங்கு 11 மாணவ- மாணவிகள் படிக்கின்றனர்.
இங்கு கடந்த ஆகஸ்ட் 25ஆம் தேதி முதல்வரின் காலை உணவுத் திட்டம் தொடங்கப்பட்ட நிலையில் இத்திட்டத்தின் சமையலராக உசிலம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த பட்டியலின சமூகத்தைச் சோ்ந்த முனிய செல்வி (29) என்பவா் பணியாற்றி வருகிறாா்.
இவர் பட்டியலினத்தவர் என்பதால் அவர் சமைத்த உணவை சாப்பிடக்கூடாது என்று மாணவர்களின் பெற்றோர்கள் வற்புறுத்தியுள்ளனர். இதனால் 2 மாணவர்கள் மட்டுமே உணவு சாப்பிட்டுள்ளனர். அதில் ஒருவர் முனிய செல்வியின் மகன்.
இதுகுறித்து செல்வி அளித்த தகவலின்பேரில், கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியா், எட்டயபுரம் வட்டாட்சியா் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினா் பள்ளிக்கு சென்று பெற்றோா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
இதையும் படிக்க | பெற்றோா்- சமையலா் பிரச்னை:அரசுப் பள்ளியில் காலை உணவை புறக்கணித்த மாணவா்கள்: அமைச்சா் விசாரணை
மேலும் சமூக நலன்- மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பெ. கீதா ஜீவனும் பள்ளிக்கு நேரடியாக சென்று விசாரித்தார்.
இந்நிலையில் திமுக எம்.பி. கனிமொழி இன்று(செவ்வாய்க்கிழமை) காலை பள்ளிக்கு நேரில் சென்று மாணவர்களுக்கு காலை உணவை பரிமாறி தானும் அவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டார். அமைச்சர் கீதா ஜீவனும் அவர்களுடன் அமர்ந்து உணவருந்தினார். மேலும் சமையலர் முனிய செல்வியிடனும் கனிமொழி பேசினார்.