முகப்பு
தமிழ்நாடு

அமைச்சர் துரைமுருகன் அறிக்கைக்கு அண்ணாமலை விளக்கம்

திமுக ஆட்சிக்காலத்தில் வெறும் 5 அணைகளே கட்டப்பட்டது என அண்ணாமலை கூறியதாக துரைமுருகன் வெளியிட்ட மறுப்பு அறிக்கைக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விளக்கமளித்துள்ளார்.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 3:00 AM
கோப்புப்படம்
பகிர்:

திமுக ஆட்சிக்காலத்தில் வெறும் 5 அணைகளே கட்டப்பட்டது என அண்ணாமலை கூறியதாக துரைமுருகன் வெளியிட்ட மறுப்பு அறிக்கைக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விளக்கமளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், தமிழக அரசியலில் மூத்த தலைவர்களில் ஒருவரும், நீண்ட நெடிய அரசியல் அனுபவம் மிக்கவருமான, திமுக பொதுச்செயலாளர், அண்ணன் அமைச்சர் துரைமுருகன் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். 

நேற்றைய தினம், என்மண்என்மக்கள் நடைபயணத்தின்போது, மடத்துக்குளம் சட்டமன்றத் தொகுதியில், கொங்கு பகுதியில் உள்ள 24 அணைகளில், திமுக வெறும் ஐந்து அணைகளையே கட்டியுள்ளது என்று பேசியிருந்தேன். அண்ணன் துரைமுருகன், திமுக நாற்பதுக்கும் மேற்பட்ட அணைகள் கட்டியிருப்பதாக அறிக்கை வெளியிட்டுள்ளார். கொங்கு பகுதியில் ஐந்து அணைகள் என்று நான் குறிப்பிட்டுக் கூறியதை அவர் கவனிக்க மறந்துவிட்டார். 

புள்ளி விவரங்களை விரல் நுனியில் வைத்து விளையாடும் அண்ணன் துரைமுருகன், அவசரகதியில், இந்த சிறிய தகவலைச் சரிவர கவனிக்காமல் கோட்டை விட்டுவிட்டாரே என்பது வருத்தத்தைத் தருகிறது. 

மேலும் திமுக கட்டியதாக அவர் குறிப்பிட்டுள்ள அணைகளில் பல, அதிமுக ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டவை என்று தமிழக அரசு இணைய தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. அவற்றையும் திமுகவினர் திருத்த மறந்துவிட்டார்கள் என்பது, அண்ணன் துரைமுருகன் போன்ற மூத்த அமைச்சர்களை வேண்டுமென்றே முன்நிறுத்தி பின் நின்று விளையாடுகிறார்களோ என்ற சந்தேகத்தையும் எழுப்புகிறது. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →