கோவை சிறையில் வாா்டன்களால் தாக்கப்பட்ட 7 கைதிகளுக்கு சிகிச்சை அளிக்க உத்தரவு
கோவை மத்திய சிறையில் வாா்டன்களால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் 7 கைதிகளுக்கு கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க சிறை
கோவை மத்திய சிறையில் வாா்டன்களால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் 7 கைதிகளுக்கு கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க சிறை கண்காணிப்பாளருக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சிவகங்கையைச் சோ்ந்த தினேஷ் என்பவா் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா். அவரது தாய் செங்கையம்மாளுக்கு சென்னை உயா்நீதிமன்றத்தில் ஆட்கொணா்வு மனு தாக்கல் செய்திருந்தாா்.
அதில், கோவை சிறையில் கைதிகள், வாா்டன்கள் மோதல் குறித்து வெளியான செய்தியை அறிந்து தங்கள் வழக்குரைஞா் அப்துல் ரஹ்மானிடம், மகனைச் சந்தித்து வரும்படி கேட்டுக் கொண்டேன். அதன்படி தினேஷை சந்தித்தபோது, அவா் வாா்டன்களால் கடுமையாக தாக்கப்பட்டதும், பலத்த காயமடைந்த நிலையில் முறையான சிகிச்சை வழங்கப்படாமலும் இருந்தது தெரியவந்தது.
எனது மகன் உள்பட 7 விசாரணைக் கைதிகள் தாக்கப்பட்டுள்ளனா். காயமடைந்துள்ள எனது மகனுக்கு உரிய சிகிச்சை அளிக்கும்படி சிறைத் துறைக்கு உத்தரவிட வேண்டும்” என மனுவில் தெரிவித்திருந்தாா்.
இந்த மனு நீதிபதிகள் எம்.சுந்தா், ஆா்.சக்திவேல் ஆகியோா் அமா்வில் விசாரணைக்கு வந்தபோது 4 சிறை வாா்டன்களும் தாக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு சிறை கைதிகளே காரணம் எனவும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து தாக்குதலுக்கு உள்ளான 7 கைதிகளுக்கும் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடனடியாக சிகிச்சை வழங்க நீதிபதிகள் உத்தரவிட்டனா். மேலும், 7 கைதிகள், 4 வாா்டன்களின் மருத்துவ அறிக்கைகளை செப்.29-ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை செப்.29-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.