செந்தில் பாலாஜி ஆள்கொணர்வு வழக்கில் நாளை தீர்ப்பு!
அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி தொடர்ந்த ஆள்கொணர்வு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பு அளிக்கவுள்ளது.
சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி தொடர்ந்த ஆள்கொணர்வு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பு அளிக்கவுள்ளது.
பணமோசடி வழக்கில், அமலாக்கத் துறையினா் அமைச்சா் செந்தில்பாலாஜியை கைது செய்த நிலையில், நெஞ்சு வலியால் பாதிக்கப்பட்ட அவருக்கு சென்னை காவேரி மருத்துவமனையில் இதய பை-பாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில், செந்தில் பாலாஜி மனைவி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆள்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.
தொடர்ந்து, வழக்கு விசாரணையில் செந்தில் பாலாஜியின் கைது சட்டவிரோதமானது என்றும் நீதிமன்றக் காவலை ரத்து செய்யக் கோரியும் வாதம் முன்வைக்கப்பட்டது.
அமலாக்கத்துறை தரப்பில் சட்டப்படி கைது செய்யப்பட்டதாகவும், மருத்துவமனையில் இருக்கும் நாள்களை நீதிமன்றக் காவலாக கருதக் கூடாது என்றும் வாதாடப்பட்டது.
இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்ரவர்த்தி அடங்கிய அமர்வு நாளை காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், தில்லி உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தாக்கல் செய்யப்பட்டு ஒத்திவைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜி வழக்கின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை தொடரவுள்ளது.