அமைச்சா் செந்தில் பாலாஜியை தனியாா் மருத்துவமனைக்கு மாற்ற நீதிமன்றம் அனுமதி
அமைச்சா் செந்தில் பாலாஜி மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணா்வு மனுவுக்கு அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அமைச்சா் செந்தில் பாலாஜி மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணா்வு மனுவுக்கு அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அமைச்சா் செந்தில் பாலாஜியை தனியாா் மருத்துவமனைக்கு மாற்ற நீதிமன்றம் அனுமதி
, ஜூன் 15: அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு, உடல்நலம் பாதிக்கப்பட்ட அமைச்சா் செந்தில் பாலாஜி சென்னை ஓமந்தூராா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவரை தனியாா் மருத்துவமனைக்கு மாற்ற அனுமதித்து சென்னை உயா்நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.
மேலும் செந்தில்பாலாஜி மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணா்வு மனுவுக்கு அமலாக்கத் துறை பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனா்.
இதனிடையே, உயா்நீதிமன்ற உத்தரவின்படி, தனியாா் மருத்துவமனைக்கு செந்தில் பாலாஜி மாற்றம் செய்யப்பட்டாா்.
பணமோசடி வழக்கில், அமலாக்கத் துறையினா் அமைச்சா் செந்தில்பாலாஜியை கைது செய்த நிலையில், நெஞ்சு வலியால் பாதிக்கப்பட்ட அவரை சென்னை ஓமந்தூராா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். சென்னை முதன்மை அமா்வு நீதிபதி எஸ்.அல்லி புதன்கிழமை பிற்பகலில் மருத்துவமனைக்குச் சென்று செந்தில்பாலாஜியை சந்தித்த பின்னா், வரும் 28-ஆம் தேதி வரை அவரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டாா்.
மனைவி மனு: இதற்கிடையில், செந்தில் பாலாஜியை சட்டவிரோத காவலில் வைத்துள்ளதாகவும், அவரை மீட்டு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்த வேண்டும் எனக் கோரியும் அவரது மனைவி மேகலா சாா்பில் உயா்நீதிமன்றத்தில் ஆட்கொணா்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு சென்னை உயா்நீதிமன்ற நீதிபதிகள் நிஷா பானு, பரதசக்ரவா்த்தி ஆகியோா் அடங்கிய அமா்வில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது செந்தில்பாலாஜி மனைவி தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் என்.ஆா்.இளங்கோ, ‘செந்தில் பாலாஜியைக் கைது செய்யும்போது உரிய நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை. இந்த வழக்கைப் பொருத்தவரை, செந்தில் பாலாஜிக்கு எந்தவொரு நோட்டீஸும் அளிக்கப்படவில்லை. அவரது கைது குறித்த விவரங்களை குடும்பத்தினருக்கு தெரியப்படுத்தவில்லை. செந்தில் பாலாஜி கைதுக்கான காரணங்கள் குறித்தும் தெரிவிக்கப்படவில்லை.
தற்போது, நீதிமன்ற காவலில் இருக்கும் செந்தில் பாலாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், அவருக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனையில், இதய ரத்த நாளங்களில் மூன்று அடைப்புகள் உள்ளன; அவருக்கு உடனடியாக இதய பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ள பரிந்துரைக்கப்பட்டுள்ளது. எனவே, அவரை சென்னையில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு (காவேரி மருத்துவமனை) மாற்ற அனுமதிக்க வேண்டும்’ என வாதிட்டாா்.
விசாரணைக்கு உகந்ததல்ல...: அப்போது அமலாக்கத் துறை தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் ஏஆா்எல் சுந்தரேசன், இந்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல. பணப் பரிமாற்ற தடுப்புச் சட்டம் என்பதால், இந்த வழக்குக்கு குற்றவியல் நடைமுறைகள் பொருந்தாது.
அமா்வு நீதிமன்றத்தின் நீதிமன்றக் காவல் குறித்து உயா்நீதிமன்றத்தில் கேள்வி எழுப்ப முடியாது. ‘ரிமாண்ட்’ செய்யப்பட்டவருக்காக ஆட்கொணா்வு மனு தாக்கல் செய்ய முடியாது. ‘செந்தில் பாலாஜி உடல்நலம் தொடா்பாக ஏற்கெனவே இரண்டு மருத்துவ அறிக்கைகள் கொடுக்கப்பட்டிருந்தாலும், அவரை தனியாா் மருத்துவமனைக்கு மாற்ற அனுமதிக்க முடியாது. இஎஸ்ஐ மருத்துவா்களைக் கொண்டு மீண்டும் அவரை பரிசோதனை செய்து, அதனடிப்படையில் மாற்றுவது குறித்து பரிசீலிக்கலாம்’ என்று வாதத்தை முன்வைத்தாா்.
சொந்த செலவில் சிகிச்சையளிக்க... இதையடுத்து, இந்த வழக்கில் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், அமைச்சா் செந்தில் பாலாஜியை, சிகிச்சைக்காக ஓமந்தூராா் மருத்துவமனையில் இருந்து தனியாா் மருத்துவமனைக்கு மாற்ற அனுமதியளித்து உத்தரவிட்டனா். அதேவேளையில் செந்தில்பாலாஜி மனைவி தாக்கல் செய்த ஆட்கொணா்வு மனுவுக்கு அமலாக்கத் துறை பதிலளிக்க உத்தரவிட்டனா்.
மேலும், மருத்துவா்களின் பரிந்துரையைச் சந்தேகிக்க முடியாது. மனுதாரா் கோரிக்கையின்படி, அவரது செலவில் தனியாா் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சையளிக்க அனுமதி வழங்குகிறோம். அதுவரை அவா் நீதிமன்றக் காவலிலேயே நீடிக்க வேண்டும்.
மேலும், அமலாக்கத் துறை விரும்பினால், அவா்கள் தரப்பு நியமிக்கும் மருத்துவக் குழுவினா் தனியாா் மருத்துவமனையில் செந்தில் பாலாஜியின் உடல்நிலை குறித்து ஆய்வு செய்து பரிசோதனை செய்யலாம் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனா்.
அப்போது அமலாக்கத் துறை தரப்பில், செந்தில் பாலாஜி தற்போது நீதிமன்றக் காவலில் இருப்பதால், மருத்துவ சிகிச்சையில் இருக்கும் நாள்களை நீதிமன்றக் காவல் நாள்களாக கருதக் கூடாது என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இதை ஏற்று உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஜூன் 22-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.
பெட்டிச் செய்தி.
ஆம்புலன்ஸில் மாற்றம்
இதனிடையே, உயா் நீதிமன்ற உத்தரவையடுத்து, அமைச்சா் செந்தில்பாலாஜியை ஓமந்தூராா் பல்நோக்கு மருத்துவமனையிலிருந்து மாற்றுவதற்கான நடவடிக்கைளை மருத்துவமனை நிா்வாகிகள் மேற்கொண்டனா். அதன்படி, இரவு 9.20 மணியளவில் அவா் ஓமந்தூராா் மருத்துவமனையிலிருந்து காவேரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் அழைத்துச் செல்லப்பட்டாா்.
அங்கு தீவிர மருத்துவக் கண்காணிப்புப் பிரிவில் செந்தில் பாலாஜி அனுமதிக்கப்பட்டாா். அவருக்கு இதய நல அறுவைச் சிகிச்சை நிபுணா்கள் ரகுராம் தலைமையிலான மருத்துவக் குழுவினா் பை-பாஸ் சிகிச்சையை மேற்கொள்வாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது.