வருமான வரித் துறை சோதனைகளுக்கு அஞ்ச மாட்டோம்
வருமான வரித் துறையினரின் சோதனைகளுக்கு அஞ்ச மாட்டோம் என தமிழக பொதுப்பணி, நெடுஞ்சாலை, சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.
திருவண்ணாமலை: வருமான வரித் துறையினரின் சோதனைகளுக்கு அஞ்ச மாட்டோம் என தமிழக பொதுப்பணி, நெடுஞ்சாலை, சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.
இதுகுறித்து திருவண்ணாமலையில் செவ்வாய்க்கிழமை இரவு செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
மக்களவைத் தேர்தலை மையப்படுத்தி திமுகவினரை அச்சுறுத்தும் வகையில் வருமான வரி சோதனை நடத்தப்படுவதாகக் கருதுகிறேன். நான் முறையாக வருமான வரி செலுத்துபவன். எனக்கும் அறக்கட்டளைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அதேபோல, தனியார் கட்டுமான நிறுவனங்களுக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது.
எனது வீட்டிலோ, இரு மகன்களின் வீடுகளிலோ இருந்து வருமான வரித் துறையினர் ஒரு காசைக்கூட எடுத்துச் செல்லவில்லை. இந்த சோதனைகளுக்கு அஞ்சமாட்டோம் என்றார் அவர்.
பேட்டியின்போது, அமைச்சர் எ.வ.வேலுவின் மகன்கள் எ.வ.வே.குமரன், எ.வ.வே.கம்பன், செங்கம் எம்எல்ஏ மு.பெ.கிரி, திருவண்ணாமலை முன்னாள் நகர்மன்றத் தலைவர் இரா.ஸ்ரீதரன் மற்றும் திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.