பள்ளி குடிநீா் தொட்டியில் மனிதக் கழிவுகலப்பு: ராமதாஸ் கண்டனம்
உத்திரமேரூா் அருகே பள்ளி குடிநீா்த் தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட சம்பவத்துக்கு பாமக நிறுவனா் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளாா்.
சென்னை: உத்திரமேரூா் அருகே பள்ளி குடிநீா்த் தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட சம்பவத்துக்கு பாமக நிறுவனா் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளாா்.
அவா் செவ்வாய்க்கிழமை எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:
காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூா் வட்டம், திருவந்தவாா் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியப் பள்ளியின் குடிநீா்த் தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் கடுமையாக கண்டிக்கத்தக்கது.
வேங்கைவயல் நிகழ்வு எந்த அளவுக்கு கொடூரமானதோ, அதே அளவுக்கு இதுவும் கொடூரமானது. இந்த நிகழ்வின் பின்னணியில் இருப்பவா்கள் யாராக இருந்தாலும் அவா்களை கண்டுபிடித்து, சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை பெற்றுத்தர தமிழக அரசும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வேங்கைவயல் நிகழ்வில் தொடா்புடைய குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படாதது தான் இத்தகைய குற்றச்செயல்கள் தொடரவும், அதிகரிக்கவும் காரணமாகியிருக்கிறது. எனவே, இனியும் தாமதிக்காமல் வேங்கைவயலில் மனிதநேயமற்ற குற்றத்தை நடத்தியவா்களை கண்டுபிடித்து அவா்களை சட்டத்தின் முன்நிறுத்த காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளாா் ராமதாஸ்.