அண்ணாமலை போட்டியிட மறுப்பு? பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியிடுவதில் தாமதம் ஏன்?
பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியிடுவதில் தாமதம் ஏற்படுவது பற்றி...
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் பாஜகவின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீட்டில் இழுபறி நீடித்து வருகின்றது.
அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் போட்டியிடும் பாஜகவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. கடந்த திங்கள்கிழமையே வேட்புமனு தாக்கல் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
வருகின்ற ஏப்ரல் 6 ஆம் தேதியுடன் வேட்புமனு தாக்கல் நிறைவடையவுள்ள நிலையில், வேட்பாளர்கள் பட்டியலை வெளியிடாமல் பாஜக தாமதித்து வருகின்றது.
மயிலாப்பூர், ராசிபுரம் (தனி), மொடக்குறிச்சி, தளி, ராமநாதபுரம், மானாமதுரை (தனி), உதகை, குளச்சல், அவினாசி, பத்மநாபபுரம், திருப்பூர் தெற்கு, கோவை வடக்கு, கந்தர்வகோட்டை, புதுக்கோட்டை, திருப்பத்தூர், மதுரை தெற்கு, சாத்தூர், திருச்செந்தூர், வாசுதேவநல்லூர் (தனி), ராதாபுரம், நாகர்கோயில், விளவங்கோடு, ஆவடி, திருவண்ணாமலை, தஞ்சாவூர், திருவாரூர், அறந்தாங்கி ஆகிய தொகுதிகள் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், பாஜகவுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் வெற்றிக்கு சாதகமில்லாதது என்று ஏற்கெனவே கட்சியின் மேலிடத்தில் அண்ணாமலை அதிருப்தி தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்போது கோவை வடக்கு சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட அண்ணாமலை விருப்பம் தெரிவிப்பதாகவும், ஆனால், அந்த தொகுதியில் வானதி சீனிவாசனை போட்டியிட வைக்க கட்சித் தலைமை முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
அண்ணாமலையை மொடக்குறிச்சி தொகுதியில் போட்டியிட கட்சித் தலைமை வலியுறுத்தும் நிலையில், தான் விருப்பப்பட்ட கோவை வடக்கு தொகுதி கிடைக்கவில்லை என்றால் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று அண்ணாமலை திட்டவட்டமாக தெரிவித்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாஜகவின் தேர்தல் பொறுப்பாளர் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் உள்ளிட்டோர் சென்னையில் முகாமிட்டு தொடர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
நாளை மறுநாள் சென்னையில் பிரதமர் நரேந்திர மோடி பிரசாரம் மேற்கொள்ளவிருக்கும் சூழலில், நாளைக்குள் வேட்பாளர் பட்டியலை வெளியிடும் கட்டாயத்துக்கு பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
மற்றொரு தேசிய கட்சியான காங்கிரஸும் இதுவரை வேட்பாளர் பட்டியலை வெளியிடவில்லை. அக்கட்சியின் தமிழ்நாடு தேர்தல் மேலாண்மைக் குழுவின் தலைவர் மாணிக்கம் தாகூர் நேற்று தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.
வேட்புமனு தாக்கல் செய்ய சனி மற்றும் திங்கள் ஆகிய இரு நாள்கள் மட்டுமே உள்ளது குறிப்பிடத்தக்கது.