வெளிநாட்டு நிதிப் பங்களிப்பு சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு: திரும்பப் பெற பிரதமருக்கு முதல்வர் வலியுறுத்தல்
மதச்சிறுபான்மையின அமைப்புகள் வெளிநாடுகளில் இருந்து பெறும் நிதியை முடக்கும் முயற்சியில் மத்திய பாஜக அரசு இறங்கியுள்ளது என முதல்வர் ஸ்டாலின் கூறியது...
வெளிநாட்டு நிதிப் பங்களிப்பு(எஃப்சிஆா்ஏ) சட்ட திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
வெளிநாடுகளில் இருந்து தன்னாா்வ தொண்டு அமைப்புகளுக்கு வரும் நிதியை முறைப்படுத்த மத்திய அரசால் அந்த சட்டத் திருத்த மசோதா, மக்களவையில் கடந்த மாதம் 25-ஆம் தேதி கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த மசோதா, சிறுபான்மையினருக்கு எதிரானது என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
இந்நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு எதிா்க்கட்சிகளைச் சோ்ந்த எம்.பி.க்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இந்த ஆா்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த ஏராளமான எம்.பி.க்கள், சமாஜவாதி எம்.பி.க்கள் டிம்பிள் யாதவ், ராம் கோபால் யாதவ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்பி முகம்மது பஷீா், தேசியவாத காங்கிரஸ் (எஸ்பி) எம்.பி. சுப்ரியா சுலே, ஆா்எஸ்பி கட்சி எம்.பி. பிரேம் சந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். அப்போது அவா்கள் தங்களது கைகளில் தன்னாா்வ தொண்டு நிறுவனங்களை குறிவைப்பதை நிறுத்துங்கள் என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை வைத்திருந்தனா். மேலும், மத்திய அரசுக்கு எதிராக அவா்கள் முழக்கமிட்டதுடன், மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தினா்.
இந்நிலையில், வெளிநாட்டு நிதிப் பங்களிப்பு(எம்சிஆர்ஏ) சட்ட திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் 'எக்ஸ்' பக்க பதிவில்,
* வெளிநாட்டு நிதிப் பங்களிப்பு (ஒழுங்குமுறை) சட்டமுன்வரைவு, 2026 என்ற பெயரில் மத்திய பாஜக அரசால் முன்மொழியப்பட்டிருக்கும் திருத்தங்கள் முழுக்க முழுக்க கிறித்தவத் தொண்டு நிறுவனங்களையும், தேவாலயங்களையும், பிற மதச் சிறுபான்மைத் தொண்டு நிறுவனங்களையும், குறிவைத்துத் தொடுக்கப்படும் நேரடித் தாக்குதல் ஆகும்.
* ஏற்கெனவே வக்பு வாரிய சட்டத்திருத்தம் மூலம் இஸ்லாமிய சொத்துகளைக் கபளீகரம் செய்ய முயன்றதையடுத்து, தற்போது மற்ற மதச்சிறுபான்மையின அமைப்புகள் வெளிநாடுகளில் இருந்து பெறும் நிதியை முடக்கும் முயற்சியில் மத்திய பாஜக அரசு இறங்கியுள்ளது.
* எதிர்க்கட்சிகளின் போராட்டத்தாலும், கிறித்தவர்கள் அதிக அளவில் வாழும் கேரளத்தில் தேர்தல் நடைபெற இருப்பதாலும் இப்போதைக்குப் பின்வாங்குவது போல நடித்து, விரைவில் நாடாளுமன்றச் சிறப்புக் கூட்டத்தொடரைக் கூட்டி இந்த சட்டத்திருத்தத்தை நிறைவேற்ற பாஜக அரசு திட்டமிடுவதாக அறிகிறேன்.
* இந்த முயற்சிகளைக் கைவிட்டு, பிரதமர் நரேந்திர மோடி இந்தத் தன்னிச்சையான, அநியாயச் சட்டத்திருத்தத்தை முற்றிலுமாகத் திரும்பப் பெறும் நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.