33 ஆண்டுகள் அளப்பரிய சேவை: மன்மோகன் சிங்குக்கு ஸ்டாலின் நன்றி
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மாநிலங்களவையில் 33 ஆண்டுகள் உறுப்பினராக இருந்து ஆற்றிய அளப்பரிய சேவைக்கு திமுக சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்வதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவை உறுப்பினர் பதவியிலிருந்து முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இன்று ஓய்வுபெறுகிறார். அவரது 33 ஆண்டு கால பதவி இன்றுடன் முடிவுக்கு வந்துள்ளது.
இது குறித்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது,
அன்புள்ள டாக்டர் மன்மோகன் சிங் அவர்களுக்கு, மாநிலங்களவையில் 33 ஆண்டுகள் உறுப்பினராக இருந்து தாங்கள் நாட்டுக்கு ஆற்றிய அளப்பரிய சேவைக்காகத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாகவும், தனிப்பட்ட முறையிலும் எனது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தங்களது பதவிக்காலம் முழுவதும், தன்னடக்கம் – அறிவாற்றல் – உயர் அரசியல் பண்பு ஆகியவற்றை வெளிப்படுத்தி, கட்சி வேறுபாடின்றி அனைவரது நன்மதிப்பையும் பாராட்டையும் பெற்றுள்ளீர்கள். உங்களது தலைமைத்துவம், குறிப்பாகக் கடினமான காலங்களில் நீங்கள் அதை வெளிப்படுத்திய விதம், என்னை உட்படப் பலருக்கும் ஊக்கமாக இருந்துள்ளது.
வாழ்வில் புதிய கட்டத்தை நோக்கித் தாங்கள் அடியெடுத்து வைக்கும் இவ்வேளையில், இந்திய நாட்டுக்கும் இந்திய மக்களுக்கும் நீங்கள் ஆற்றிய பெருந்தொண்டினை எண்ணிப் பெருமை கொள்வீர்கள் என நம்புகிறேன்.
தி.மு.கழகம் சார்பாகவும், தமிழ்நாட்டு மக்களின் சார்பாகவும் தாங்கள் நல்ல உடல்நலத்தோடும், மகிழ்ச்சியோடும் திகழவும், அடுத்து தாங்கள் மேற்கொள்ளும் பணிகளில் மனநிறைவெய்தவும் விழைகிறேன். தங்களது அறிவாற்றலாலும், தொலைநோக்குப் பார்வையாலும் தொடர்ந்து எங்களுக்கு ஊக்கமளிப்பீராக! என்று தெரிவித்துள்ளார்.