தான் பலவீனமான பிரதமர் என்பதை மோடி ஒப்புக்கொள்வாரா? மு.க. ஸ்டாலின் கேள்வி
பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கேள்வி...
மன்மோகன் சிங்கை பலவீனமான பிரதமர் என விமர்சித்த பிரதமர் மோடி, மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதலை தடுக்காததால், 'தான் ஒரு பலவீனமான பிரதமர்' என்பதை ஏற்பாரா? என முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் திருவாரூரில் பிரசாரத்தைத் தொடங்கிய நிலையில் திருச்சி, கரூர், ஈரோடு, கோவையைத் தொடர்ந்து நேற்று(ஏப்ரல் 3) முதல் தென் மாவட்டங்களில் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
நேற்று நெல்லை - பாளையங்கோட்டையைத் தொடர்ந்து கன்னியாகுமரி வந்த அவர், இன்று காலை குமரி கடற்கரை மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் உள்ள மக்களை நேரில் சந்தித்து வாக்கு சேகரித்தார். குறிப்பாக மீனவர்களுடன் கலந்துரையாடினார்.
Advertisement
தொடர்ந்து நாகர்கோயிலில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். திமுக அரசின் மீனவர்களுக்கு செய்தவற்றை பட்டியலிட்ட முதல்வர், மீனவர்கள் விஷயத்தில் மத்திய அரசு வஞ்சிப்பதாக குற்றம் சாட்டினார்.
"குமரி மாவட்டத்திற்கு நாம் பல்வேறு திட்டங்களை உருவாக்கி, பல்வேறு சாதனைகளை நாம் செய்து காட்டியிருக்கிறோம். எல்லாவற்றையும் சொல்லிக் கொண்டிருந்தால் எனக்கு இந்த ஒரு நாள் போதாது!
மீனவர்களின் உண்மையான நண்பனாக - உற்ற தோழனாகச் செயல்பட்டு வருகிறது திமுக அரசு.
ஆனால், வெளியுறவுக் கொள்கையைக் கையில் வைத்திருக்கும் மத்திய பா.ஜ.க. அரசு, கடல் கடந்து மீன்பிடிக்கச் செல்லும் நம்முடைய மீனவர்களைக் காக்கத் தவறிவிட்டது.
தவறியது மட்டுமல்ல; வெளியுறவுக் கொள்கையில் தோல்வி அடைந்திருக்கிறது. சிறிய அண்டை நாடுகளிடம்கூட.
இந்தியாவிற்குச் செல்வாக்கு இல்லாத நிலையைப் பிரதமர் மோடி உருவாக்கி இருக்கிறார். தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்களை இந்திய மீனவர்களாக நினைத்து பா.ஜ.க. அரசு அக்கறை செலுத்தவில்லை என்பதுதான் வருத்தத்திற்குரியது.
அதன் விளைவுதான் நம்முடைய மீனவர்கள் மேல் இலங்கைக் கடற்படை நடத்தும் தொடர் தாக்குதல்கள். காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் பிரதமர் மோடி என்ன சொன்னார், 'மன்மோகன் சிங் என்ற பலவீனமான பிரதமர் ஆள்வதால்தான் நம் மீனவர்கள் மீது தாக்குதல் நடக்கிறது. பலமான பிரதமர் நான் வந்தால் நடக்காது" என்று பேசினார். இப்போது நடக்கிறதா? இல்லையா? நடந்து கொண்டிருக்கிறது. இப்போது, தான் ஒரு பலவீனமான பிரதமர் என்பதை மோடி ஏற்றுக்கொள்வாரா? ஏற்றுக்கொள்ளமாட்டாரா?
மதுரை எய்ம்ஸ், கோவை, மதுரை மெட்ரோ ரயில், ஓசூர் விமான நிலையம், பேரிடர் நிவாரண நிதி, பள்ளிக் கல்வி நிதி, கீழடி ஆய்வறிக்கை, தொகுதி மறுவரையறையில் உரிய நியாயம், நிதிப் பகிர்வில் தமிழ்நாட்டிற்குரிய பங்கு, தமிழ்நாட்டிற்கு மறுக்கப்படும் புதிய ரயில்வே திட்டங்கள். இப்படி, தமிழ்நாட்டின் சார்பில் பிரதமர் மோடியைக் கேட்க ஏராளமான கேள்விகள் இருக்கின்றன. இதெல்லாம், நான் தொடர்ச்சியாகக் கேட்கும் கேள்விகள். இதெற்கெல்லாம் பதில் இருக்கிறதா? இல்லை" என்று பேசியுள்ளார்.