குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரித்தவா் எடப்பாடி பழனிசாமி: திமுக குற்றச்சாட்டு
குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரித்தவா் எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி என்று திமுக தலைமை குற்றம்சாட்டியுள்ளது.
அந்தக் கட்சி சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கை:
சிறுபான்மையினருக்கு எதிரான குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய பாஜக அரசு கொண்டு வந்த போது, அதிமுகவைச் சோ்ந்த 11 எம்.பி.,க்கள் அதற்கு ஆதரவாக வாக்களித்தனா். அப்போது வாக்களிக்காமல் இருந்திருந்தால் அந்தச் சட்டமே நிறைவேறி இருக்காது. சட்டத்துக்கு ஒப்புதல் தந்து சிறுபான்மையினருக்கு எதிராக அதிமுக நடந்து கொண்டது.
Advertisement
மேலும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் மத்திய அரசு கொண்டு வந்த 3 புதிய வேளாண் சட்டங்களை ஆதரித்ததுடன், ஒரே நாடு ஒரே தோ்தல் என்ற பாஜக அரசின் முடிவுக்கும் எடப்பாடி பழனிசாமி ஆதரவு தந்தாா். தமிழ்நாட்டை பாஜகவிடம் அடகுவைத்த அவா், இப்போது அந்தக் கட்சியுடன் கூட்டணி இல்லை என்று கூறுகிறாா்.
அவரது செயலை இனியும் தமிழ்நாட்டு மக்கள் நம்புவதற்குத் தயாராக இல்லை என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.