திமுக தோல்வி குறித்து புள்ளி விவரங்களுடன் விவாதிக்கத் தயார்: இபிஎஸ்
சென்னை அண்ணா நகரில் பிரசாரத்தின்போது எடப்பாடி பழனிசாமி பேசியது குறித்து...
திமுக தோல்வி குறித்து புள்ளி விவரங்களுடன் விவாதிக்கத் தயார் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஏப். 8) தெரிவித்தார்.
சென்னை அண்ணாநகரில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி இன்று (ஏப். 7) பிரசாரம் மேற்கொண்டார்.
பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:
Advertisement
''விலைவாசியை கட்டுப்படுத்த முடியாத பொம்மை முதல்வர் ஆட்சி செய்து வருகிறார். தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டுகளுக்கு ரூ. 5 லட்சம் கோடி கடன் வாங்கியுள்ளது திமுக அரசு. கடன் வாங்கி கொள்ளை அடித்த அரசு தொடர வேண்டுமா?
கொள்ளை அடிப்பதிலும் ஊழல் செய்வதிலும் இந்தியாவிலேயே முதன்மையான அரசாக திமுக உள்ளது. 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் 5.5 லட்சம் அரசு காலி பணியிடங்கள் நிரப்பப்படும் எனக் கூறினார் மு.க. ஸ்டாலின். ஆனால், அதனை செய்யவில்லை. படித்த இளைஞர்களுக்கு வேலை கிடைக்கவில்லை.
அதிமுக ஆட்சியில் தொழில் முதலீட்டு மாநாடுகள் நடத்தப்பட்டு கொண்டுவரப்பட்ட தொழிற்சாலைகள் இன்று உற்பத்தியை தொடங்கியுள்ளன. அவை பொருளாதார வளர்ச்சிக்கு பேருதவியாக இருக்கின்றன. நான் பெற்ற பிள்ளைக்கு ஸ்டாலின் பெயர் வைத்திருக்கிறார்.
அதிமுக ஆட்சியில் வேளாண்மைத் துறை முதன்மை வளர்ச்சி பெற்றிருந்தது. அதில் 60% மக்கள் பயன் அடைந்தனர். அதிமுக ஆட்சியில் கரோனா காலத்திலும் வேளாண் துறை வளர்ச்சி அடைந்திருந்தது. ஆனால் திமுக ஆட்சியில் வேளாண்மைத் துறை கவலைக்கிடமாக உள்ளது.
திமுக ஆட்சியின் படுதோல்வி குறித்து புள்ளி விவரங்களுடன் விவாதிக்கத் தயார். சைக்கிள் ஓட்டுவது, பளுதூக்கி உடற்பயிற்சி செய்வது என்று வேடிக்கை காட்டிக்கொண்டு இருக்கிறார் ஸ்டாலின்.
அரசு செலவில் வெளிநாட்டுக்கு சைக்கிள் ஓட்டவா செல்ல வேண்டும். தமிழ்நாட்டில் ஏராளமான பிரச்னைகள் உள்ளன. அது குறித்து அவருக்கு கவலையில்லை.
தொழில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டதாகவும், புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கொண்டுவரப்பட்டுவிட்டதாக ஸ்டாலின் பொய் கூறுகிறார். அண்ணா நகரில் எத்தனை பேருக்கு புதிதாக வேலை கிடைத்துள்ளது.
ஒரு தொழிற்சாலையை உருவாக்க வேண்டுமென்றால் 4 ஆண்டுகள் தேவைப்படும். அது தெரிந்தும் ஸ்டாலின் பொய் கூறி வருகிறார்.
தமிழ்நாட்டில் குழந்தைகள், பெண்கள், ஏன்? மூதாட்டிக்கு கூட பாதுகாப்பு இல்லை. உரிய பாதுகாப்பு கொடுக்க முடியாத ஆட்சி தொடர வேண்டுமா? குற்றங்கள் அதிகரிப்பதற்கு காரணம் என்ன என்பது குறித்து ஸ்டாலின் சிந்திக்கிறாரா? தமிழ்நாட்டில் கிராமங்கள், நகரங்கள் என பல்வேறு பகுதிகளில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துவிட்டது.
அதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் முழுவதும் ஒழிக்கப்படும். சட்டத்தின் ஆட்சி நடக்கும். அப்படிப்பட்ட ஆட்சி அமைய அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டும்.
வீட்டு வரி விகிதம் 100% உயர்த்தியுள்ளது திமுக அரசு. மின் கட்டணம் உயர்ந்துள்ளது. மின் கட்டண உயர்வைக் கேட்டாலே ஷாக் அடிக்கிறது'' என எடப்பாடி பழனிசாமி பேசினார்.