நாமக்கல்லில் மனைவியை கொன்று கணவர் தற்கொலை: காவல்துறை விசாரணை
நாமக்கல்லில் மனைவியை கொன்று கணவர் தற்கொலை: காவல்துறை விசாரணை
நாமக்கல்: நாமக்கல்லில் குடும்ப தகராறில் மனைவியை கொன்று கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
நாமக்கல்-பரமத்தி சாலை கொங்கு நகரை சேர்ந்தவர் மனோகரன்(54). இவருடைய மனைவி அனிதா(47). இவர்களுக்கு ராகுல்(24) என்ற மகன் உள்ளார். ஓமன் நாட்டில் பொறியாளராக மனோகரன் பணியாற்றி வந்த நிலையில், கடந்த வியாழக்கிழமை நாமக்கல் வந்தார்.
அப்போது, சந்தைப்பேட்டை புதூரில் உள்ள தங்களது பழைய வீட்டை புதுப்பிப்பது தொடர்பாகவும், மகனை வெளிநாடுக்கு வேலைக்கு அனுப்புவது தொடர்பாகவும் கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. மேலும், மணப்பள்ளியில் உள்ள மனோகரனின் பெற்றோர் மற்றும் தங்கை கீதாவுக்கு பணம் அனுப்பி வந்தது குறித்தும் இருவருக்கும் இடையே மோதல் எழுந்தது.
Advertisement
இந்த நிலையில் வெள்ளிக்கிழமை இரவு மீண்டும் தகராறு ஏற்பட, ராகுல் சந்தைப்பேட்டை புதூரில் உள்ள புதுப்பிக்கும் பணி நடைபெறும் வீட்டிற்கு சென்று இரவு தங்கிவிட்டார். சனிக்கிழமை காலை அவர் மீண்டும் வீடு திரும்பியபோது, அனிதா கழிவறையில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கொலையாகிக் கிடந்தார். மற்றொரு அறையில் மனோகரன் தூக்கிட்டு நிலையில் தற்கொலை செய்து கொண்டிருந்தார்.
இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ராகுல், நாமக்கல் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த காவல் ஆய்வாளர் சங்கர பாண்டியன் இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இச்சம்பவம் தொடர்பாக ராகுலிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.