ஒரே நேரத்தில் வாக்களித்த மும்மதத்தைச் சேர்ந்த தோழிகள்
ஈரோடு கச்சேரி வீதி மாநகராட்சி பள்ளியில் வாக்களித்த மூன்று மதங்களை சேர்ந்த தோழிகள்
ஈரோடு: ஈரோட்டில் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ மதங்களைச் சேர்ந்த தோழிகள் இணைந்து வந்து முதல்முறையாக வாக்குப் பதிவு செய்தனர்.
ஈரோட்டில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகின்றது. இதில் ஈரோடு கச்சேரி வீதியில் உள்ள மாநகராட்சி துவக்கப் பள்ளியில் வித்தியாசமான சம்பவம் நடைபெற்றுள்ளது.
பிரியதர்ஷினி, ஜவஹாரா ருக்கையா, இலக்கிய சம்பத் ஆகிய மூன்று இளம் பெண்கள் முதல் முறையாக ஆர்வமுடன் வாக்களிக்க வந்திருந்தனர்.
Advertisement
Advertisement
இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த இவர்கள் சிறுவயதில் இருந்தே ஒன்றாகப் படித்து தோழிகளாக பழகி வருபவர்கள்.
இவர்கள் மூவருக்கும் இது முதல் தேர்தல் என்பதால் மூவரும் புத்தாடை அணிந்து வாக்களிக்க வந்திருந்தனர்.
இதுகுறித்து மூவரும் கூறியது: தாங்கள் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ ஆகிய மூன்று மதங்களை சேர்ந்தவர்களாக இருந்தாலும் தங்களுக்குள் எந்த வேற்றுமையும் காண்பதில்லை என்றும் வேற்றுமையில் ஒற்றுமை என்ற இந்திய நாட்டின் பாரம்பரியத்தை பின்பற்றும் வகையில் தாங்கள் ஒற்றுமையுடன் தோழிகளாக இருந்து வருவதாகவும் தற்போது முதல் முறையாக வாக்களிப்பதால், மூவரும் இணைந்து வந்து வாக்களித்துள்ளதாகவும் தெரிவித்தனர் .
மூன்று வெவ்வேறு மதங்களைச் சேர்ந்த 3 தோழிகள் ஒன்றாக இணைந்து வந்து வாக்கு செலுத்தியது அந்தப் பகுதி வாக்காளர்களின் கவனத்தை ஈர்த்தது.