வாழப்பாடி அருகே 3 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து!
வாழப்பாடி அருகே ஆம்னி பேருந்து, சுற்றுலா வேன், லாரி அடுத்தடுத்து மோதி விபத்து ஏற்பட்டது.
வாழப்பாடி: சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே இன்று(ஏப். 24) அதிகாலை ஆம்னி பேருந்து, சுற்றுலா வேன், லாரி ஆகிய 3 வாகனங்கள் அடுத்தடுத்து மோதிக் கொண்ட விபத்தில், வேன் டிரைவர், பயணிகள் உள்பட 7 பேர் காயமடைந்தனர். 30 பேர் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
சென்னையில் இருந்து கோயம்புத்தூர் நோக்கி சென்ற ஆம்னி பேருந்து, இன்று புதன்கிழமை அதிகாலை 2:45 மணி அளவில் சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், வாழப்பாடி அருகே முத்தம்பட்டி பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, ஊட்டியில் இருந்து கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி நோக்கி சென்று கொண்டிருந்த சுற்றுலா வேன் மீது நேருக்கு நேர் மோதியது. அப்போது அவ்வழியாக வந்த லாரியும் இந்த வாகனங்களுடன் மோதியது.
இந்த விபத்தில் சுற்றுலா வேன் டிரைவர் அன்பழகன்(39) மற்றும் பயணிகள் வாஞ்சிநாதன்(39), ராஜா (39) உள்பட 7 பேர் காயமடைந்தனர்.
Advertisement
Advertisement
ஆம்னி பேருந்து, வேனில் பயணித்த 30க்கும் மேற்பட்ட பயணிகள் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினர். இந்த விபத்தால் சேலம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வாழப்பாடி காவல் ஆய்வாளர் பாஸ்கர் பாபு மற்றும போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்துக்குள்ளான பயணிகளை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.