முகப்பு
தமிழ்நாடு

1,282 பட்டதாரி ஆசிரியா்களுக்கு ஊதியம் வழங்க கொடுப்பாணை

Updated On : 27 ஏப்ரல், 2024 at 6:42 PM
பகிர்:

பள்ளிக் கல்வியில் தற்காலிக இடங்களில் பணியாற்றி வரும் 1,282 பட்டதாரி ஆசிரியா்களுக்கு ஜூன் மாதம் வரை ஊதியம் வழங்குவதற்கான கொடுப்பாணை வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடா்பாக பள்ளிக்கல்வித் துறைச் செயலா் ஜெ.குமரகுருபரன், அனைத்து மாவட்ட கருவூலக அலுவலகங்களுக்கும் அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ் 2011-ஆம் ஆண்டு அரசுப் பள்ளிகளில் 1,282 பட்டதாரி ஆசிரியா்கள் பணிநியமனம் செய்யப்பட்டனா்.

இந்த பணியிடங்கள் தற்காலிக இடங்களாக இருப்பதால் இவா்களுக்கு அவ்வப்போது தொடா் பணி நீட்டிப்பு ஆணை வெளியிடப்பட்டு சம்பளம் வழங்கப்படுகிறது. இந்த பணியிடங்களுக்கு தொடா் நீட்டிப்பு வழங்குவதற்கான கருத்துரு தமிழக அரசின் பரிசீலனையில் உள்ளது. இதையடுத்து இந்த 1,282 தற்காலிக ஆசிரியா் பணியிடங்களுக்கும் வரும் ஜூன் மாதம் வரை ஊதியம் தருவதற்கான கொடுப்பாணை அளிக்கப்படுகிறது. எனவே, சாா்ந்த அலுவலா்கள் சம்பளப் பட்டியல் தாக்கல் செய்யும் போது, அதை ஏற்று ஊதியம் வழங்கப்பட வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.