தலைமைச் செயலகத்தில் வேலை வேண்டுமா?: ரூ. 25 லட்சம் மோசடி!
வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடி செய்தவர் கைது
தலைமைச் செயலகத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடி செய்தவரை ஆவடி போலீஸார் கைது செய்தனர்.
சென்னை செங்குன்றத்தில் வசித்து வந்த 52 வயதான ராஜ்பாபு என்பவர், தலைமைச் செயலகத்தில் வேலை வாங்கித் தருவதாக, முத்தரசன் என்பவரிடம் கடந்த 2018ஆம் ஆண்டில் ஆசைவார்த்தைகள் கூறியுள்ளார். இதனையடுத்து, ``தனக்கு அந்த வேலை வேண்டும்’’ என்று கூறி, ராஜ்பாபுவுக்கு முத்தரசன் ரூ. 2.5 லட்சத்தைக் கொடுத்துள்ளார்.
அதுமட்டுமின்றி, ``தனக்கு தெரிந்த வேறு சிலருக்கும் வேலை வேண்டும்’’ என்று கூறி, ராஜ்பாபுவிடம் சிலரை அறிமுகம் செய்து வைத்துள்ளார் முத்தரசன்.
Advertisement
அவர்களும் தலா ரூ. 2.5 லட்சம் என்ற வீதத்தில் 9 பேர் சேர்ந்து ரூ. 22.5 லட்சத்தை கொடுத்துள்ளனர். மேலும், தங்களது புகைப்படம் மற்றும் சான்றிதழ்களின் நகல்களையும் ராஜ்பாபுவிடம் கொடுத்துள்ளனர்.
இருப்பினும், சில ஆண்டுகளாகியும், தங்களுக்கு வேலை வாங்கித் தராததால், தாங்கள் அனைவரும் மோசடிக்கு ஆளாக்கப்பட்டதை உணர்ந்தனர்.
இதனையடுத்து, அவர்கள் 10 பேரும் ராஜ்பாபுவை வற்புறுத்தியுள்ளதால், ரூ. 11.7 லட்சத்தை மட்டும் அவர்களிடம் திருப்பி அளித்துள்ளார், ராஜ்பாபு.
இந்த நிலையில், விரக்தியடந்த அவர்கள், ராஜ்பாபுவின் மீது காவல்நிலையத்தில் மோசடி புகார் அளித்தனர். இதனைத் தொடர்ந்து, ஆவடி காவல்நிலைய போலீஸார் ராஜ்பாபுவை கைது செய்தனர்.